search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாராபுரத்தில் 3 மணி நேரம் சூறாவளி காற்றுடன் பலத்த மழை- அன்னூரில் வாழைகள் சேதம்
    X

    தாராபுரத்தில் 3 மணி நேரம் சூறாவளி காற்றுடன் பலத்த மழை- அன்னூரில் வாழைகள் சேதம்

    தாராபுரத்தில் நேந்று இரவு 3 மணி நேரம் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. அன்னூரில் வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    தாராபுரம்:

    திருப்பூரில் கடந்த திங்கட்கிழமை இரவு சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் ரெயில் நிலைய மேற்கூரை காற்றில் பறந்தது. இதில் மரங்கள், மின் கம்பங்கள் சேதம் அடைந்தது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இரவு 11.30 மணிக்கு தொடங்கிய மழை அதிகாலை 3 மணி வரை மூன்றரை மணி நேரம் நீடித்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளமான பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. தாராபுரத்தை சுற்றி உள்ள மூலனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை நீடித்தது. தாராபுரத்தில் 16 மில்லி மீட்டரும், மூலனூரில் 41 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

    கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் நேற்று மாலை கடும் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. ஒன்னக்கரசம்பாளையம், குரும்பம்பாளையம், கெம்பநாயக்கன்பாளையம், அக்கரைசெங்கப்பள்ளி, பாசக்குட்டை ஆகிய கிராமங்களில் சூறை காற்றுக்கு வாழை மரங்கள் பாதியில் முறிந்து விழுந்தது.

    இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தற்போது வாழை பயிரிட்டு 6 மாதம் முதல் 7 மாதங்கள் வரை ஆகிறது.

    ஒரு சில விவசாய நிலத்தில் பயிரிட்டு உள்ள வாழை மரங்கள் 2, 3 மாதத்திற்கு பிறகு வெட்ட தயார் நிலைக்கு வரும். ஒரு சில தோட்டத்தில் பூக்கள் வெளிப்பட்டு 3 மாதம் கழித்து காய் முற்றி வெட்டுக்கு வரும் நிலையிலேயே ஏற்பட்ட சூறாவளி காற்றினால் வாழை மரம் பாதியில் முறிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளது. இதற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அன்னூர்கிராம நிர்வாக அலுவலரும் சேத மதிப்பு குறித்து மதிப்பீடு செய்து வருகிறார்.

    Next Story
    ×