search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல்லில் ஆட்டோ டிரைவரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது
    X

    திண்டுக்கல்லில் ஆட்டோ டிரைவரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது

    திண்டுக்கல்லில் பட்டபகலில் ஆட்டோ டிரைவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது25). ஆட்டோ டிரைவராக இருந்தார். கடந்த சனிக்கிழமை பாரதிபுரம் கொலசாலை அருகே நின்று கொண்டிருந்தபோது 2 பேர் மணிகண்டனை சரமாரியாக அரிவாளால் வெட்டி சாய்த்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்த அவரை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். நகர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் மேட்டுப்பட்டியை சேர்ந்த விக்னு என்ற விக்னேஷ் (வயது25), அதே பகுதியை சேர்ந்த மகேந்திரன் (22) ஆகியோர்தான் மணிகண்டனை வெட்டியது என தெரிய வந்தது. போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரித்தனர். 3 பேரும் நண்பர்களாகவே பழகி வந்துள்ளனர்.

    விக்னேஷ் பொன்மாந்துரை புதுப்பட்டியை சேர்ந்த பாஸ்கர் கொலை வழக்கில் தொடர்புடையவர். அடிக்கடி மணிகண்டனிடம் பணம் வாங்கி செலவு செய்து வந்துள்ளார். அவரது நடவடிக்கை பிடிக்காததால் மணிகண்டன் அவருடன் பழகுவதை தவிர்த்து வந்தார். மேலும் தனது சகோதரரிகளிடமும் விக்னேஷ் பற்றி தெரிவித்துள்ளார்.

    இதனால் தன்னை கொலை செய்து விடுவார்களோ? என்ற அச்சத்தில் விக்னேஷ், மகேந்திரனுடன் சேர்ந்து மணிகண்டனை அரிவாளால் வெட்டியது தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதேபோல் நகர் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் ரோந்து பணி மேற் கொண்டபோது மேட்டுப்பட்டி அருகே சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

    அவர்கள் பிரதீப் என்ற குறிஞ்சிகுமார் (20), முருகன் என்ற டெல்லி முருகன் (25) என தெரிய வந்தது. இவர்கள் திருட்டு, வழிப்பறி வழக்கில் சம்மந்தப்பட்டு போலீசார் பிடியில் சிக்காமல் இருந்து வந்தனர். இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    Next Story
    ×