search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீலகிரியில் சூறாவளிக்கு 50 ஆயிரம் வாழைகள் சேதம் - வால்பாறையில் 20 வீடுகள் சூறை
    X

    நீலகிரியில் சூறாவளிக்கு 50 ஆயிரம் வாழைகள் சேதம் - வால்பாறையில் 20 வீடுகள் சூறை

    நீலகிரியில் சூறாவளிக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சேதம் அடைந்துள்ளன.
    ஊட்டி:

    கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழையால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    கூடலூர் பகுதியில் கடந்த சில தினங்களாக மாலை அல்லது இரவில் பரவலாக கோடை மழை பெய்தது. முதுமலை ஊராட்சி உள்ளிட்ட இடங்களில் கடும் சூறாவளி காற்று வீசியதால் வாழைகள் சரிந்து விழுந்தன. இதில் அப்பகுதி விவசாயிகள் பலத்த நஷ்டம் அடைந்து உள்ளனர். கூடலூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு இடியுடன் கனமழை பெய்தது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இரவு 11 மணி முதல் விடிய விடிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் வறண்டு கிடந்த பாண்டியாறு, மாயார், பொன்னானி உள்பட அனைத்து நீர்நிலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இரவு முழுவதும் மழையுடன் காற்று வீசியதால் பல இடங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன.

    புளியாம்பாரா மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான கரளிக்கண்டி, அத்தூர், கொல்லூர், காபிக்காடு, கொட்டக்குன்னி, கறிக்குற்றி, புளியம்வயல், மஞ்சமூலா, முன்டக்குன்னு, பாடந்துரை உள்ளிட்ட கிராமங்களில் பயிரிட்டு இருந்த வாழைகள் காற்றில் சாய்ந்து விழுந்தன. இதேபோல் தேவர்சோலை மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளிலும் வாழைகள் சரிந்து விழுந்தன. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சேதம் அடைந்துள்ளன.

    இதை அறிந்த தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர் ஆனந்த் தலைமையிலான அலுவலர்கள், கூடலூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜெயலட்சுமி, தேவர்சோலை வருவாய் ஆய்வாளர் செந்தில், கிராம நிர்வாக அலுவலர் நூர்ஜகான் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பந்தலூர் தாலுகா பகுதியிலும் பந்தலூர், உப்பட்டி, கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, முள்ளன்வயல் உள்பட பல பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் எருமாடு கூலால், மண்ணாத்திவயல், பள்ளிசந்திப்பு ஆகிய பகுதியில் மரங்கள் விழுந்து வீடுகள் சேதம் அடைந்தன. கக்குண்டி பகுதியில் ரவீந்திரகுமார், காளிமுத்து, சசி, பாபு, பிஜூ ஆகியோரது தோட்டத்தில் பயிரிட்டு இருந்த வாழைகள் முறிந்து விழுந்தன.

    இதேபோல் நெல்லியாளம் டேன்டீ, கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, அம்பல மூலா, முள்ளன் வயல் பகுதியில் கடந்த 4 நாட்களாக மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, எருமாடு வருவாய் ஆய்வாளர் சாந்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் யுவராஜ், ஸ்ரீஜா, உதவியாளர் ராஜேந்திரன் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகள் சேதம் அடைந்த வாழைகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    இதேபோன்று வால்பாறையில் பலத்த சூறாவளிக்காற்றுடன் கனமழைக்கு 15 வீடுகள் சேதம் அடைந்தன. மரம் விழந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வால்பாறை அருகே உள்ள முடீஸ் வட்டார பகுதியில் தோனிமுடி எஸ்டேட் முதல்பிரிவு, ஆனைமுடி, தாய்முடி, சோலையார் ஆகிய எஸ்டேட் பகுதிகளில் மட்டும் மழை பெய்தது.

    குடியிருப்புக்கு அருகில் இருந்த 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த பூமரம் சாய்ந்து சாலையில் விழந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×