search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடுமலை அருகே தொழிலாளி வீட்டில் 40 பவுன் நகை-பணம் திருட்டு
    X

    உடுமலை அருகே தொழிலாளி வீட்டில் 40 பவுன் நகை-பணம் திருட்டு

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பட்டபகலில் தொழிலாளி வீட்டில் 40 பவுன் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை கபூர்கான் வீதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். ஓய்வு பெற்ற மில் தொழிலாளி. நேற்று மதியம் இவரது மனைவிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக ரவிச்சந்தின் தனது மனைவியை அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு வீட்டை பூட்டி விட்டு அழைத்து சென்றார். சிகிச்சை முடிந்த பின்னர் வீட்டுக்கு திரும்பினார்.

    அப்போது வீட்டின் முன் பக்க கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது 2 அறைகளில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது.பீரோ அருகே சென்று பார்த்த போது அதில் இருந்த 40 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

    இது குறித்து ரவிச்சந்திரன் உடுமலை போலீசில் புகார் அளித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கை ரேகைகளை பதிவு செய்தனர். மேலும் சம்பவஇடத்துக்கு மோப்ப நாய் டேவிட் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் மூலம் வீட்டின் உள் பகுதி, வெளிப் பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது.

    இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தனிப்படைகள் அமைத்தும் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள். பட்டபகலில் ரெயில் நிலையம் அருகே நகை, பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்ற துணிகர சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×