search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீர் பிடிப்பில் மழை - பெரியாறு அணைக்கு நீர் வரத்து தொடங்கியது
    X

    நீர் பிடிப்பில் மழை - பெரியாறு அணைக்கு நீர் வரத்து தொடங்கியது

    நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்ய தொடங்கிய நிலையில் பெரியாறு அணைக்கு நீர் வரத்து வந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    கூடலூர்:

    தமிழகத்தில் சுட்டெரித்து வந்த கோடை வெயிலால் மக்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகி வந்தனர். சித்திரை மாதம் பிறந்த பிறகு வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்த காரணத்தால் மழை வருமா? என்று ஏங்கித் தவித்தனர்.

    பகலில் வெளியில் நடமாட முடியாத நிலையில் தவித்த மக்களுக்கு இரவு நேரங்களில் வீசிய அதிவேக காற்று மட்டுமே ஆறுதலாக இருந்தது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் பல பகுதிகளிலும் முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியிலும் பெய்த மழையினால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர்.

    முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 112.10 அடியாக உள்ளது. நீர் வரத்து இல்லாமல் இருந்த அணையில் தற்போது 100 கன அடி வரை தண்ணீர் வருகிறது. இந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1,247 மில்லியன் கன அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர் மட்டம் 38.48 அடி. வரத்து இல்லாத நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 60 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 33.55 அடி. வரத்து 24 கன அடி. சோத்துப்பாறை அணை நீர் மட்டம் 84.42 அடி வரத்து 9 கன அடி. திறப்பு 3 கன அடி.

    தேக்கடி 7.6, கூடலூர் 10.6, சண்முகாநதி அணை 17, உத்தமபாளையம் 15.4, வீரபாண்டி 32, வைகை அணை 7.2, மஞ்சளாறு 58, சோத்துப்பாறை 11, கொடைக்கானல் 62.8 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது

    கோடை மழை தொடங்கியதால் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்து வந்த வெப்பத்தின் தாக்கம் அடியோடு குறைந்து இதமான சூழல் நிலவி வருகிறது. மேலும் சில நாட்கள் மழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    Next Story
    ×