search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போத்தனூரில் தொழில் அதிபர் வெட்டிக் கொலை- 6 பேர் கும்பல் வெறிச்செயல்
    X

    போத்தனூரில் தொழில் அதிபர் வெட்டிக் கொலை- 6 பேர் கும்பல் வெறிச்செயல்

    போத்தனூரில் இன்று தொழில் அதிபரை 6 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை:

    கோவை போத்தனூர் செட்டிப்பாளையம் அருகே மீனா எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் பரந்தாமன்(வயது 36).

    இவர் செட்டிப்பாளையம் ரோட்டில் அப்பகுதியில் ஒலிம்பிக் என்ற பெயரில் கார்களை பழுது பார்க்கும் நிறுவனத்தை நடத்தி வந்தார்.

    இன்று காலை இவரும், ஊழியர்கள் 4 பேரும் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தனர். மதியம் 12.30 மணி அளவில் 3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் நிறுவனத்துக்குள் புகுந்தனர்.

    நிறுவனத்தை சூறையாடிய அவர்கள் கண்காணிப்பு கேமிராக்களை அடித்து உடைத்தனர்.

    இதனால் ஊழியர்கள் அலறியடித்தபடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். சத்தம் கேட்டு பரந்தாமன் அறைக்குள் இருந்து வெளியே வந்தார். அவரை அரிவாளால் கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்தபடி பரந்தாமன் சம்பவ இடத்திலேயே இறந்தார். உடனே கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடியது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் போத்தனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். சம்பவ இடத்துக்கு மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொலையாளிகள் தப்பிச் செல்லும் போது பிழைக்க வந்தால் பிழைப்பை மட்டும் பார்க்க வேண்டும், அதை மீறினால் இது தான் கதி என்று ஆவேசமாக சத்தம் போட்டு விட்டு சென்றுள்ளனர். பரந்தாமன் எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரை கொலை செய்த கும்பல் யார்? தொழில் ரீதியான விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணங்கள் எதுவும் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×