search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகம் முழுவதும் ‘நோட்டா’ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது - தேர்தல் ஆணையம் தகவல்
    X

    தமிழகம் முழுவதும் ‘நோட்டா’ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது - தேர்தல் ஆணையம் தகவல்

    தமிழகம் முழுவதும் ‘நோட்டா’ குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியிருப்பதாக சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் கூறியது. #Nota #ChennaiHighCourt #ElectionCommission
    சென்னை:

    தமிழகம் முழுவதும் ‘நோட்டா’ குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியிருப்பதாக சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் கூறியது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இதுதொடர்பான வழக்கை முடித்து வைத்தனர்.

    சென்னை ஐகோர்ட்டில், நிர்மல்குமார் என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில், “தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள், ‘நோட்டா’வில் வாக்களிக்கலாம். ஆனால், இந்த ‘நோட்டா’ குறித்து பொதுமக்களுக்கு முழுமையான விழிப்புணர்வை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தவில்லை.

    இதனால், ஏதேனும் ஒரு வேட்பாளருக்கு தங்களுடைய வாக்குகளை செலுத்த மறைமுகமாக வாக்காளர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இது சுதந்திரமாக வாக்களிக்க வேண்டும் என்ற தேர்தல் விதிகளுக்கு எதிராக அமைந்து விடுகிறது. எனவே, நோட்டா குறித்து மக்கள் தெரிந்துகொள்ளும் விதமாக போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்தல் ஆணையத்துக்கு, உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதில், “நோட்டா குறித்து பஸ் நிலையங்களிலும், தியேட்டர்களிலும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நோட்டா குறித்த துண்டறிக்கைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை மக்கள் அதிகம் கூடும் மெரினா கடற்கரை, கோயம்பேடு, பெசன்ட் நகர் கடற்கரைகளில் பெரிய அளவிலான எல்.இ.டி., டி.வி. திரையில் விழிப்புணர்வு விளம்பரங்கள் காட்டப்படுகின்றன. 32 மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள், அனைத்து தாலுகா அலுவலகங்கள் மூலமும், நடமாடும் வாகனங்கள் மூலமாகவும், நோட்டா குறித்து விளம்பரம் செய்யப்படுகிறது” என்று கூறப்பட்டு இருந்தது.

    மேலும் அந்த பதில் மனுவில், “தெற்கு ரெயில்வே, மெட்ரோ ரெயில் மூலமும் நோட்டா குறித்து விளம்பரப்படுத்தப்படுகிறது. போட்டிகள், கலைநிகழ்ச்சிகள், மாரத்தான் ஓட்டம் மூலமும் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது. நோட்டா குறித்து தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு முழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது” என்று கூறப்பட்டிருந்தது.

    இந்த பதில் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.    #Nota #ChennaiHighCourt #ElectionCommission

    Next Story
    ×