search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன்
    X
    காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன்

    போலீசுக்கு மிரட்டல் - காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. மீது வழக்கு

    போலீசாருடன் மோதலில் ஈடுபட்ட காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #DMK
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே நேற்று மதியம் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்ய அ.தி. மு.க.வினர் அனுமதி பெற்று இருந்தனர்.

    இதேபோல காஞ்சீபுரம் காந்திரோடு தேரடி ஆஞ்சநேயர் கோவில் அருகே நடிகர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்ய தி.மு.க.வினர் அனுமதி வாங்கி இருந்தனர்.

    இந்த நிலையில் பிரச்சாரத்திற்காக காஞ்சீபுரம் வந்த ஓ.பன்னீர்செல்வம் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றார். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தி.மு.க.வினரிடம் உதயநிதி இன்னும் பிரசாரத்துக்கு வரவில்லை. அதனால் துணை முதலமைச்சர் கோவிலுக்கு வந்து செல்லும் வரை சிறிது நேரம் பிரசாரத்தினை நிறுத்தி வையுங்கள்’ என்று கூறினர்.

    இதனை ஏற்க மறுத்த தி.மு.க.வினர் போலீசாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் எழிலரசன் எம்.எல்.ஏ. தலைமையில் மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மற்றும் சின்ன காஞ்சீபுரம் இன்ஸ்பெக்டர் சுரேஷ் சண்முகம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

    அவர்களிடமும் எழிலரசன் எம்.எல்.ஏ. கடும் வாக்குவாதம் செய்தார். பின்னர் போலீசாரின் பேச்சுவார்த்தையை ஏற்று தி.மு.க.வினர் அனைவரும் கலைந்து சென்றனர்.

    இந்த நிலையில் போலீசாருடன் மோதலில் ஈடுபட்ட எழிலரசன் எம்.எல்.ஏ. மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகாத வார்த்தைகளால் பேசுதல், கூட்டாக சேர்ந்து மிரட்டுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல் மறியலில் ஈடுபட்ட 50 தி.மு.க.வினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #DMK
    Next Story
    ×