search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளி மாணவர்களுக்கு இறுதி தேர்வு முடிந்தது - நாளை முதல் கோடை விடுமுறை
    X

    பள்ளி மாணவர்களுக்கு இறுதி தேர்வு முடிந்தது - நாளை முதல் கோடை விடுமுறை

    பள்ளி மாணவர்களுக்கு இறுதி தேர்வு இன்றுடன் முடிவடைந்ததால், மாணவர்கள் உற்சாகமாக விடுமுறை கொண்டாட தயாராகி விட்டனர். #SummerHoliday
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் 18-ந் தேதி நடைபெறுவதால் பள்ளி இறுதி தேர்வுகளை முன் கூட்டியே நடத்தி முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் இறுதி வாரத்தில் நிறைவடைந்தன.

    அதனைத் தொடர்ந்து அனைத்து பள்ளிகளின் ஆண்டு இறுதி தேர்வுகளை விரைந்து முடிக்க பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்தது.

    ஏப்ரல் 1-ந் தேதி தொடங்கி 12-ந் தேதிக்குள் இறுதி தேர்வுகளை முடிக்க வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டது.

    அதன் அடிப்படையில் அரசு, அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் இறுதி தேர்வு நடைபெற்று வந்தது. இன்றுடன் தேர்வுகள் முடிந்து பள்ளிகள் விடுமுறைக்காக மூடப்படுகின்றன.

    பள்ளி கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையுள்ள அரசு பள்ளிகள் அனைத்தும் இன்று மாலை வரை செயல்படுகின்றன. நாளை முதல் மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    அதேபோல 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு நாளை வரை தேர்வு நடைபெறுகிறது.

    இதுதவிர சி.பி.எஸ்.இ. பெரும்பாலான பள்ளிகள் இன்றுடன் நிறைவடைகின்றன. ஒருசில பள்ளிகள் 16-ந் தேதி வரை செயல்படுகிறது. அதனைத் தொடர்ந்து 5 நாட்கள் அரசு விடுமுறையாகும். அதனால் தனியார் பள்ளிகள் கூட 16-ந் தேதிக்கு செயல்படாது.

    தேர்தல் வந்ததால் முன் கூட்டியே மாணவர்களுக்கு தேர்வு நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் வழக்கமாக கோடை காலத்தில் கிடைக்கக்கூடிய விடுமுறையை விட இந்த வருடம் அதிகமாக கிடைத்துள்ளது.

    எப்போதும் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவர்களுக்கு 40 நாட்களும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 30 நாட்களும் விடுமுறை கிடைக்கும். ஆனால் இந்த ஆண்டு அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் 50 நாட்களுக்கும் மேலாக கோடை விடுமுறை கிடைத்துள்ளது.

    இதனால் மாணவர்கள் உற்சாகமாக விடுமுறை கொண்டாட தயாராகி விட்டனர்.

    கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 3-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று கல்வித்துறை எச்சரித்துள்ளது. அதை மீறி நடத்தும் பள்ளிகள் மீது கல்வித்துறை நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வரும் கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு படிக்க உள்ள மாணவர்களுக்கு இப்போதே சிறப்பு வகுப்பு நடத்த திட்டமிடும் தனியார் பள்ளிகள் குறித்து புகார் கொடுத்தால் நடவடிக்கை உறுதி என்று கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #SummerHoliday

    Next Story
    ×