search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
    X

    குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

    கிருஷ்ணகிரி அருகே குடிநீர் கேட்டு 60-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அடுத்த வெங்கடாபுரம் பாஞ்சாயத்து கே.ஏ.நகர் தர்கா பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இவர்களுக்கு இரண்டு ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீரை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. 

    கடந்த மூன்று மாதங்களாக நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால், ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வற்றியது. இதனால் இப்பகுதியில் உள்ளவர்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்ய முடியவில்லை. குடிநீருக்காக அருகில் உள்ள விவசாய கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர். 

    இப்பகுதிக்கு சீரான குடிநீர் வழங்க வேண்டும் என பி.டி.ஓ. மற்றும் பஞ்சாயத்து கிளர்க் வேல்முருகன் ஆகியோரிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த 60-க்கும் மேற்பட்ட பெண்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் உள்ள இரண்டு ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வற்றியதால், அருகில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்க சென்றால் அவர்கள் தண்ணீர் எடுக்கக்கூடாது என்று சண்டையிடுகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு தண்ணீர் எடுக்க சென்றபோது ஏற்பட்ட சண்டையில் இரண்டு பெண்களுக்கு கையில் காயம் ஏற்பட்டது. இது குறித்து போலீசில் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

    எனவே, எங்கள் பகுதிக்கு சீராக குடிநீர் வழங்க வேண்டும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியே கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டோம் என்றனர். அப்போது பஞ்சாயத்து கிளர்க் நேரில் வந்து தண்ணீர் பிரச்சனையை உடனே சரி செய்வதாக கூறியதையடுத்து, முற்றுகையிட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×