search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து குடிநீர் எடுக்கும் பணி நிறுத்தம்
    X

    செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து குடிநீர் எடுக்கும் பணி நிறுத்தம்

    சேறும், சகதியுமாக வந்ததால் குடிநீருக்காக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் எடுக்கும் பணி நிறுத்தப்பட்டு உள்ளது. மாற்று ஏற்பாடாக கல்குவாரியில் இருந்து முழுமையாக தண்ணீர் எடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது. #ChembarambakkamLake
    சென்னை:

    சென்னை மாநகருக்கு பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு போதிய மழையின்மையால் ஏரிகளில் நீர் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தற்போதைய நிலையில் செம்பரம்பாக்கம் மற்றும் சோழவரம் ஏரிகளில் ஆங்காங்கே குட்டைபோல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் செம்பரம்பாக்கம் ஏரி தான் பெரியது. 85.4 அடி உயரம் கொண்ட இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடியாகும். செம்பரம்பாக்கம் ஏரியில் குட்டைபோல் தேங்கி கிடக்கும் தண்ணீரை வாய்க்கால் வெட்டி, ஏரியில் தண்ணீர் அளவிடும் பகுதியில் உள்ள மோட்டார் பம்பு இருக்கும் ஷட்டர் பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் கடந்த 2 மாதங்களாக தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது.

    3 ஆயிரத்து 800 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் நேற்றைய நிலவரப்படி வெறும் 9 மில்லியன் கன அடி (0.57 அடி அதாவது 1 அடிக்கும் குறைவு) மட்டுமே குட்டை போல் தண்ணீர் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. ஏரிக்கு நீர் வரத்து எதுவும் இல்லை.

    ஆனால் குடிநீர் தேவைக்காக தினசரி 63 கன அடி வீதம் தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த 1-ந்தேதி தண்ணீர் சேறும் சகதியுமாக வந்தது. இதனால் தண்ணீர் எடுக்கும் பணி நிறுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் ஏரியில் உள்ள 15 ஷட்டர்கள் இருக்கும் பகுதிகளும் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது.

    ஏரி வறண்டு கிடப்பதால் தேங்கி கிடக்கும் தண்ணீரில் மீன் பிடிப்பது மற்றும் ஆடு, மாடுகள் மேய்வதற்கான மேய்ச்சல் நிலமாகவும் ஏரி மாறி உள்ளது.



    இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    செம்பரம்பாக்கம் ஏரி வறண்டு விட்டதால், சென்னை மாநகர பகுதிக்கு முழுமையாக தண்ணீர் வினியோகிப்பதற்காக மாங்காடு பகுதியில் உள்ள கல்குவாரியில் இருந்து 1.5 டி.எம்.சி. எடுக்கும்பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இதுதவிர கடல் நீரை குடி நீராக்கும் மையமான நெம்மேலி, மீஞ்சூரில் இருந்தும், பூண்டி, புழல் மற்றும் வீராணம் ஏரிகளில் இருந்து பெறப்படும் தண்ணீர் மூலம் சென்னைக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தினசரி 550 மில்லியன் லிட்டர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது கையிருப்பு உள்ள தண்ணீர் மூலம் 2 மாதம் வினியோகிக்க முடியும். இதுதவிர காவிரி மூலம் 1,465 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியையும் நிரப்ப திட்டமிட்டு உள்ளோம்.

    போதிய மழையின்மையால் ஏரி தற்போது முற்றிலும் வறண்டுவிட்டது. தற்போது தண்ணீர் எடுக்க முடியாதபடி சேறும் சகதியுமாக வந்ததால் தண்ணீர் எடுக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து ஏரி தூர்வாருவது மற்றும் ஏரி பராமரிப்பு பணிகள் செய்வதற்காக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது ஏரி தூர்வாரும் பணி தொடங்க இருப்பதுடன், ஏரி பராமரிப்பு பணிகளும் செய்யப்பட உள்ளன. இதற்கான பூமி பூஜை முடிந்து உள்ளது.

    குறிப்பாக ஏரியின் கரை 9 கி.மீ. நீளம் உடையது. ஏரியில் 19 சிறிய மதகுகள், 5 பெரிய மதகுகள், 2 கலங்கல் (ஆயிரம் அடி நீளத்தில் தானாக உபரிநீர் வெளியேறும் பகுதி) ஆகியவை உள்ளன. இவற்றில் பழுதான பகுதிகள் சீரமைக்கப்படுவதுடன், கரைகளும் பலப்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் ஓரிரு வாரங்களில் தொடங்க இருக்கிறது.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள். #ChembarambakkamLake
    Next Story
    ×