search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆரோவில் கடலில் குளித்த போது பலியான மாணவனின் உடல் கரை ஒதுங்கியது
    X

    ஆரோவில் கடலில் குளித்த போது பலியான மாணவனின் உடல் கரை ஒதுங்கியது

    ஆரோவில் கடலில் குளித்த போது பலியான மாணவனின் உடல் இன்று காலை கரை ஒதுங்கியது.

    சேதராப்பட்டு:

    வளவனூர் அருகே கோலியனூர் வள்ளலார் நகரை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மகன் அருண்குமார் (வயது16). அதே பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (16). இவர்கள் இருவரும் பிளஸ்-1 தேர்வு எழுதி உள்ளனர்.

    நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று புதுவையை சுற்றி பார்க்க வந்தனர். பின்னர் ஆரோவில் கடற்கரைக்கு சென்றனர். அங்கு இருவரும் கடலில் இறங்கி ஆனந்தமாக குளித்தனர். அப்போது திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி இருவரும் கடலில் மூழ்கினர்.

    இதனை பார்த்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்து அலறினர். பின்னர் அங்கிருந்த மீனவர்கள் படகு மூலம் மாணவர்கள் இருவரையும் தேடினர். இதில் மயங்கிய நிலையில் தமிழ்செல்வனை மீட்டனர். அவரை சிகிச்சைக்காக பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அருண்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இருள் சூழ்ந்து விட்டதால் தேடும் பணியை கைவிட்டனர்.

    இந்த நிலையில் முதலியார்குப்பம் கடற்கரையில் அருண்குமார் உடல் கரை ஓதுங்கியது. இதனை பார்த்த மீனவர்கள் இதுபற்றி கோட்டக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×