search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேஸ்புக் மூலம் மலர்ந்த காதல் - திருமணமான 6 மாதத்தில் வரதட்சணை கொடுமை
    X

    பேஸ்புக் மூலம் மலர்ந்த காதல் - திருமணமான 6 மாதத்தில் வரதட்சணை கொடுமை

    காதல் மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்திய கணவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே வடமதுரை முத்தனாங் கோட்டையைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 21). பட்டதாரி. இவர் பேஸ்புக் பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். அப்போது விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த முத்தம்மாள் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    2 பேரும் நீண்ட நாட்களாக பேஸ்புக் மூலம் பழகி வந்துள்ளனர். இது காதலாக மாறியது. இருவரும் போன் மூலம் தங்கள் காதலை வளர்த்து வந்தனர். கடந்த 6 மாதத்துக்கு முன்பு கார்த்திக் மற்றும் முத்தம்மாள் திருமணம் செய்து கொண்டனர்.

    சிறிது காலம் மகிழ்ச்சியாக சென்ற இவர்களது வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட தொடங்கியது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் அடிக்கடி மோதிக் கொண்டனர்.

    மேலும் கார்த்திக் தன்னிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்துவதாக போலீசில் புகார் அளித்தார். ஆனால் அந்த புகார் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த முத்தம்மாள் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளித்தார்.

    இது குறித்து விசாரிக்க வடமதுரை அனைத்து மகளிர் போலீசாருக்கு எஸ்.பி. உத்தரவிட்டார். அதன்படி போலீசார் இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×