search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூர் மாவட்டத்தில் வாகன சோதனையில் ரூ.3 லட்சம் பறிமுதல்
    X

    பெரம்பலூர் மாவட்டத்தில் வாகன சோதனையில் ரூ.3 லட்சம் பறிமுதல்

    தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில், பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.3 லட்சம் பறி முதல் செய்யப்பட்டது.
    பெரம்பலூர்:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதனை தொடர்ந்து வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வாகனங்களில் பணம் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்டறிய பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடியில் நேற்று காலை தேர்தல் பறக்கும் படை அதிகாரி பழனிச்செல்வன், போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான பறக்கும் படையினர், அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது திருச்சியில் இருந்து வந்த ஒரு காரை தடுத்து, அதில் இருந்தவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா சென்மின்மாதவியை சேர்ந்த முருகன் (வயது 39) என்பது தெரியவந்தது. அவர் உரிய ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ.70 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா கொளக்காநத்தம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி தமிழரசு, போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் படைகாத்து தலைமையிலான பறக்கும் படையினர், அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா எம்.கண்ணனூரை சேர்ந்த வெங்கடாசலம் காரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரி மஞ்சுளாவிடம் ஒப்படைத்தனர்.

    இதேபோல் திருமாந்துறை சுங்கச்சாவடி வழியாக வந்த வாகனங்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரி சின்னதுரை, போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான பறக்கும் படையினர் சோதனையிட்டனர். அப்போது சென்னை போரூரை சேர்ந்த உதயகுமார் என்பவர் காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த ரூ.61 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

    இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அதிகாரிகள் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதனிடம் ஒப்படைத்தனர். மேலும் முருகன், வெங்கடாசலம், உதயகுமார் ஆகியோரிடம் தேர்தல் பறக்கும் படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று மட்டும் பெரம்பலூர் மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக 3 பேரிடம் இருந்து மொத்தம் ரூ.2 லட்சத்து 91 ஆயிரம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×