search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆரணியில் மாணவர்களுடன் தகாத உறவு- ஆசிரியை போக்சோவில் கைது
    X

    ஆரணியில் மாணவர்களுடன் தகாத உறவு- ஆசிரியை போக்சோவில் கைது

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பள்ளி மாணவர்களுடன் தகாத உறவை கொண்டிருந்த ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த பையூர் கிராமத்தை சேர்ந்தவர் உமேஷ்குமார். கல்பூண்டி அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இவரது மனைவி நித்யா (30). இவர்களுக்கு ஒரு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளனர். நித்யா ஆரணி அடுத்த மாமண்டூர் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

    நித்யா கடந்த 2016-ம் ஆண்டு ஆரணி அடுத்த பையூரில் உள்ள அரசு பள்ளியில் பணிபுரிந்து வந்தார். அதே பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில பாடம் டியூசன் எடுத்து வந்தார். அப்போது பள்ளி மாணவன் ஒருவருடன் நித்யாவுக்கு தொடர்பு ஏற்பட்டது, அந்த மாணவனுடன் நித்யா தகாத உறவில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் ஆசிரியை நித்யா செங்கம் பகுதியில் உள்ள பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அங்கும் ஒரு மாணவனுடன் நித்யாவுக்கு தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    மாணவர்களுடன் தனிமையில் இருந்த ஆபாச புகைப்படங்களை எடுத்து ரசித்து வந்துள்ளார். 2 மாணவர்களையும் வெளியூர் அழைத்து சென்று ஓட்டலில் அறை எடுத்தும் தங்கி உள்ளார்.

    இந்நிலையில் கடந்த ஆண்டு உமேஷ்குமாருக்கு தனது மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. பள்ளி விடுமுறை நாட்களில் ஒருநாள் நித்யா வீட்டில் செல்போனை வைத்து விட்டு வீட்டு வேலை செய்து கொண்டிருந்தார்.

    அப்போது உமேஷ்குமார் மனைவியின் செல்போனை எடுத்து பார்த்தபோது, அவர் 2 மாணவர்களுடன் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தனிமையில் இருந்து வந்த வீடியோ மற்றும் படங்கள் இருந்தது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த உமேஷ்குமார் தனது மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார்.

    இந்நிலையில் மாணவர்களுடன் தனது மனைவி தனிமையில் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை சேகரித்த உமேஷ்குமார் திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமியிடம் புகார் கொடுத்தார்.

    கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்ட சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு நன்னடத்தை அலுவலர் சித்ரா பிரியா அந்த மனுவை ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தார். இன்ஸ்பெக்டர் மைதிலி, சப்-இன்ஸ்பெக்டர் உஷா ஆகியோர் ஆசிரியை நித்யாவை அழைத்து விசாரணை செய்தனர்.

    மேலும் பள்ளி மாணவர்களிடம் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது ஆசிரியை நித்யா மாணவர்களுடன் தகாத உறவில் இருந்தது உறுதியானது.

    இதையடுத்து நித்யா மீது வழக்குபதிவு செய்து போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    மாணவர்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக கைதான ஆசிரியை நித்யா மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரை சஸ்பெண்டு செய்து முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
    Next Story
    ×