search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை அருகே டாஸ்மாக் ஊழியரை வெட்டி ரூ.85 ஆயிரம் கொள்ளை
    X

    நெல்லை அருகே டாஸ்மாக் ஊழியரை வெட்டி ரூ.85 ஆயிரம் கொள்ளை

    நெல்லை அருகே டாஸ்மாக் ஊழியரை வெட்டி ரூ.85 ஆயிரம் கொள்ளையடித்து தப்பி ஓடிய 3 கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    நெல்லை:

    பாளை அருகே உள்ள மேலப்பாட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 57). இவர் நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளத்தில் உள்ள குபேரன்நகர் டாஸ்மாக் கடையில் உதவி விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் நேற்று இரவு 11 மணி அளவில் ‘டாஸ்மாக்’ மதுபானக்கடையில் விற்பனையை முடித்து கடையை பூட்டியுள்ளார். விற்பனையான பணம் ரூ.84 ஆயிரத்து 950 ஐ ஒரு பேக்கில் வைத்து தனது மொபட் பெட்டியில் வைத்து பூட்டினார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டார். அவருக்கு பின்னால், அதே டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்க்கும் அய்யப்பன் (39) என்பவர் தனியாக மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    டாஸ்மாக் கடையை விட்டு சிறிது தூரத்தில் ஆறுமுகம் வந்த போது அந்த வழியாக மற்றொரு மோட்டார் சைக்கிள் வேகமாக வந்தது. அதில் 3 பேர் இருந்தனர். திடீரென அந்த மோட்டார்சைக்கிள் ஆறுமுகத்தின் மொபட் மீது, ஓவர்டேக் செய்து மோதியபடி வழி மறித்தது. இதில் ஆறுமுகம் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    அப்போது அந்த மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் அரிவாள் மற்றும் கத்தியுடன் மொபட் பெட்டியை அரிவாளால் வெட்டி திறந்து பணப் ‘பை’ யுடன் ரூ,84 ஆயிரத்து 950 ஐயும் கொள்ளை அடித்துக்கொண்டு தப்பி ஓடினர்.

    அப்போது ஆறுமுகத்துக்கு பின்னால் தனியாக மோட்டார் சைக்கிளில் வந்த பார் ஊழியர் அய்யப்பன் சத்தம் போட்டபடி கொள்ளையர்களை மறித்தார். அப்போது ஒரு கொள்ளையர்கள் அரிவாளால் அய்யப்பன் தொடையில் வெட்டி விட்டு மோட்டார்சைக்கிளில் தப்பி ஓடிவிட்டனர்.

    மொபட்டில் இருந்து கீழே விழுந்ததில் காயம் அடைந்த ஆறுமுகமும், அரிவாள் வெட்டில் காயம் அடைந்த அய்யப்பனும் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 3 கொள்ளையர்களையும் வலைவீசி தேடி வருகிறார்கள். #tamilnews
    Next Story
    ×