search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் நண்பர்கள் பலி
    X

    கரூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் நண்பர்கள் பலி

    கரூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் நண்பர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வேலாயுதம்பாளையம்:

    திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள சத்திரப்பட்டியை சேர்ந்த செல்லதுரை மகன் ராமச்சந்திரன் ( வயது 27). டிப்ளமோ படித்து விட்டு துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.

    இதையடுத்து கல்லூரி நண்பர் கரூர் மாவட்டம், வீரராக்கியத்தை சேர்ந்த சின்னுசாமி மகன் மணிகண்டன் (28) என்பவரை பார்ப்பதற்காக சென்றார். பின்னர் இருவரும் சோலார் அமைப்பது தொடர்பாக ஈரோடுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். ராமச்சந்திரன் பைக்கை ஓட்டினார். மணிகண்டன் பின்னால் அமர்ந்திருந்தார்.

    இருவரும் கரூர் - ஈரோடு நெடுஞ்சாலை புன்னம்சத்திரம் அருகே தண்ணீர்பந்தல் என்ற இடத்தில் செல்லும் போது ஈரோட்டிலிருந்து கரூர் நோக்கி அதிவேகமாக வந்த ஜீப் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இருவருக்கும் தலை மற்றும் பல்வேறு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது இருவரும் இறந்து விட்டனர். 

    இது குறித்த தகவல் அறிந்ததும் வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுசாமி சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×