search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
    X

    குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

    பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது
    பெரம்பலூர்:

    இளம்பிள்ளை வாத நோயை இந்தியாவில் ஒழிக்க, பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள், பஸ் நிலையங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் 387 மையங்களில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. பெரம்பலூர் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த முகாமில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா, தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினர்.

    இதேபோல் போலியோ சொட்டு மருந்து மையங்களில், சுகாதாரப்பணியாளர்கள், அங்கான்வாடி பணியாளர்கள், தன்னார்வ தொண்டர்கள் ஆக மொத்தம் 1,548 பணியாளர்கள் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 45 ஆயிரத்துக்கு மேற்பட்ட 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இம்முறை ஒரே ஒரு தவணை மட்டுமே போலியோ சொட்டுமருந்து வழங்கப்பட்டதால் ஏராளமான பெற்றோர் தங்களது குழந்தைகளை காலையிலேயே மையங்களுக்கு அழைத்து வந்து மருந்து கொடுத்து விட்டு சென்றனர்.

    முகாமில் துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் சம்பத், ரோட்ரி கிளப் உறுப்பினர்கள், திட்ட அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர், அரசு அலுவலர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் கலந்துகொண்டனர்.

    அரியலூர் மாவட்டத்தில் 549 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று நடைபெற்றது. அரியலூர் பஸ் நிலையத்தில் நடந்த முகாமில் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில், அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை வழங்கினார். அரியலூர் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமில் 2,193 பணியாளர்கள் ஈடுபட்டனர். நேற்று நடந்த முகாமில் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. முகாமில் ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ., துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் ஹேமசந்த்காந்தி, வருவாய் கோட்டாட்சியர் சத்தியநாரயணன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் உமாமகேஸ்வரி, நகர்புற மருத்துவமனை டாக்டர் நிரஞ்சனா, தாசில்தார் கதிரவன், மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×