search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆலங்குடி அருகே பாட்டி இறந்த துக்கத்தில் இளம்பெண் தற்கொலை
    X

    ஆலங்குடி அருகே பாட்டி இறந்த துக்கத்தில் இளம்பெண் தற்கொலை

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பாட்டி இறந்த துக்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கருக்காகுறிச்சியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவிக்கு இரு மகள்கள் இருந்தனர். அவர் இறந்துவிட்டதால் 2-வது திருமணம் செய்துள்ளார்.

    அதில் ஒரு மகளுக்கு திருமணம் முடிந்துள்ளது. மற்றொரு மகள் மதுமிதா (வயது 20). சிறுவயதில் இருந்தே பாட்டி வீட்டில் வளர்ந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக நாமக்கல்லில் உள்ள ஒரு நூற்பாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். தந்தை 2-வது திருமணம் செய்ததால் ஊருக்கு வரும்போது கூட, தந்தை வீட்டிற்கு செல்வதில்லையாம்.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அவரது பாட்டி உயிரிழந்தார். இறுதி சடங்கிற்காக ஊர் திரும்பிய மதுமிதா, அம்பேக்கர் நகரில் உள்ள சித்தி சுந்தரி வீட்டில் தங்கியுள்ளார். இதற்கிடையே அவருக்கு உறவினர்கள் திருமண ஏற்பாடு செய்துள்ளனர்.

    தந்தை 2-வது திருமணத்தால் விரக்தியில் இருந்த மதுமிதா, ஆதரவாக இருந்த பாட்டியும் இறந்ததால் மேலும் கவலை கொண்டுள்ளார். இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து ஆலங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து போலீசார் மதுமிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆலங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×