search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    21 தொகுதி இடைத்தேர்தலில் ‘ஒப்புகை சீட்டு’ எந்திரம் அறிமுகம் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
    X

    21 தொகுதி இடைத்தேர்தலில் ‘ஒப்புகை சீட்டு’ எந்திரம் அறிமுகம் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

    தமிழகத்தில் 21 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின்போது வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் எந்திரம் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். #SatyabrataSahoo #EC
    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. எப்போது வேண்டுமானாலும் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் தமிழகம் வரலாம். எனவே நாங்கள் தயார் நிலையில் இருக்கிறோம். தலைமை தேர்தல் கமிஷனர் வரும் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம்.

    தேர்தலில் எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தேவையான நடவடிக்கைகள் குறித்து அறிந்து கொள்வதற்காக தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தமிழக காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பல்வேறு தகவல்களை தெரிவித்து உள்ளனர். தொடர்ந்து இன்று அரசுத் துறை செயலாளர்கள் கலந்து கொள்ளும் கூட்டத்தை தலைமைச் செயலாளர் கூட்ட இருக்கிறார்.

    இந்த கூட்டங்களில் சேகரிக்கப்படும் தகவல்கள் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

    தேர்தல் வரவிருப்பதையொட்டி 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய 25-ந்தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி அதிகாரிகள் இடமாற்றம் நடந்து வருகிறது. ஒரு சில துறைகள் சில ஆலோசனைகளை கேட்டு உள்ளன. அதுகுறித்த தகவல்கள் தலைமை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிகளுக்கு நடக்கும் இடைத்தேர்தலில், ‘வாக்காளர்கள் யாருக்கு ஓட்டு அளித்தார்கள்’ என்பதை உறுதி செய்து கொள்வதற்கான ‘வி.வி.பி.ஏ.டி. எந்திரம்  (ஒப்புகை சீட்டு) அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த முறை மூலம் காலை 8 மணியில் இருந்து மாலை 5 மணி வரை நடக்கும் வாக்குப்பதிவின் போது ஒரு வாக்காளருக்கு 7 நிமிடங்கள் வரை தேவைப்படும்.

    தேர்தல் தொடர்பாக நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியலில் ஒரே பெயர் பல முறை இடம் பெற்றிருப்பது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியலில் ஒருவருடைய பெயர் பல இடங்களில் இருந்தால் அதனை உடனடியாக நீக்க அனைத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.



    கடந்த 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் மாநிலம் முழுவதும் உள்ள 67 ஆயிரத்து 664 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடந்தது. இதில் 7 லட்சத்து 31 ஆயிரத்து 333 பேர் விண்ணப்பங்களை அளித்து உள்ளனர். அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 53 ஆயிரத்து 912 விண்ணப்பங்களும், குறைந்த பட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 258 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. இதில் தகுதி உள்ளவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணியை 15 நாட்களுக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு துணை வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

    கூடுதலாக வாக்காளர்கள் பெயர் சேர்க்க விண்ணப்பித்து இருப்பதால் கூடுதலாக வாக்குச்சாவடிகளும் தேவைப்படும். இதுகுறித்து இந்திய தேர்தல் கமிஷனுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

    ஆசிரியர்களுக்கு பதில் இதர துறை ஊழியர்களையும் தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்படுகிறது. ஆனால் அனைத்து கிராமங்களிலும் போதுமான அரசு ஊழியர்கள் இருப்பதில்லை. இதுகுறித்து அனைத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடமும் கருத்து கேட்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #SatyabrataSahoo #EC

    Next Story
    ×