search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் பாடம் புகட்ட வேண்டும்- தங்கமணி பேச்சு
    X

    பாராளுமன்ற தேர்தலில் எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் பாடம் புகட்ட வேண்டும்- தங்கமணி பேச்சு

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் பாடம் புகட்ட வேண்டும் என்று அமைச்சர் தங்கமணி பேசினார். #admk #parliamentelection

    நாமக்கல்:

    முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு நாமக்கல் நகர அ.தி.மு.க. சார்பில் நாமக்கல் குளக்கரை திடலில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பி.ஆர்.சுந்தரம் எம்.பி. முன்னிலை வகித்தார்.

    இதில் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் நாம் பா.ஜனதா மற்றும் பா.ம.க.வுடன் அமைத்து இருக்கும் கூட்டணி வெற்றி கூட்டணி. இந்த கூட்டணி யில் இன்னும் சில கட்சிகள் இணைய உள்ளன. இதை பொறுக்க முடியாமல் பா.ம.க.வின் நிறுவனர் டாக்டர் ராமதாசை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் என்னவெல்லாம் பேசிவருகிறார் என்பதை எல்லோரும் அறிவார்கள்.

    நீங்கள் பேச, பேச எங்களின் வாக்கு வங்கி அதிகரிக்கும், உங்களின் கோபத்தின் வெளிப்பாடு எங்களின் வெற்றியை எளிதாக்கும்.

    தி.மு.க. தலைவராக இருந்த கருணாநிதி இறந்த பிறகு மு.க.ஸ்டாலின் அந்த பொறுப்புக்கு வந்து உள்ளார். அவர் தலைவரான பிறகு சந்திக்கும் முதல் தேர்தல் இதுவாகும். இதில் தோற்று விட்டால் தொண்டர்கள் நம்மை தலைவராக ஏற்கமாட்டார்கள் என்ற பயத்தில் மு.க.ஸ்டாலின் இந்த அரசு மீது சேற்றை வாரி வீசி வருகிறார்.

    காங்கிரஸ் கூட்டணியில் மு.க.ஸ்டாலினை தவிர யாரும் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளர் என அறிவிக்கவில்லை. அவரும் மம்தா பானர்ஜி கூட்டத்தில் வேறு ஒரு கருத்தை சொல்லி வந்து உள்ளார். எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் நிலையான ஆட்சி அமைய பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி மலர வேண்டும்.

    நமது எதிரி கட்சி தி.மு.க. என்பதை ஜெயலலிதா நமக்கு அடையாளம் காண்பித்து சென்று உள்ளார். இதேபோல் அவர் இருக்கும் போதே டி.டி.வி. தினகரன் குடும்பத்தை விலக்கி வைத்தார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் வரை சென்னைக்கே வராத டி.டி.வி. தினகரன் தற்போது அ.தி.மு.க.வை காப்பாற்ற போகிறேன் என்று சொல்லி வருகிறார்.

    இதை தொண்டர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். வருகிற பாராளுமன்ற தேர்தல் எதிரிகளையும், துரோகிகளையும் வீழ்த்தும் தேர்தல் என்பதை எண்ணி தொண்டர்கள் பணியாற்றிட வேண்டும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற பாடுபட வேண்டும். எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் பாடம் புகட்ட வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளை எடுத்து கூறி ஓட்டுகளை சேகரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் நாமக்கல் நகராட்சி முன்னாள் துணை தலைவர் சேகர், மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் கவுன்சிலர் மயில்சுந்தரம், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கோபிநாத், மாவட்ட பொருளாளர் டி.எல்.எஸ். காளியப்பன், கரையாம்புதூர் மகேஷ்வரன் உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    இதையொட்டி செந்தில் கணேஷ் -ராஜலட்சுமி தம்பதி யினரின் கிராமிய இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது.

    முன்னதாக ரூ.2 கோடியே 70 லட்சம் செலவில் அமைக் கப்பட்டு உள்ள நாமக்கல் ரெயில் நிலைய சாலையை அமைச்சர் தங்கமணி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

    இதேபோல் நாமக்கல் குளக்கரை திடலில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு உள்ள எம்.ஜி.ஆர். பூங்காவையும் திறந்து வைத்து பார்வையிட்டார். #admk #parliamentelection

    Next Story
    ×