search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரம்யா.
    X
    கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரம்யா.

    குறிஞ்சிப்பாடியில் பள்ளி வளாகத்தில் ஆசிரியை கழுத்தை அறுத்து படுகொலை

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் இன்று காலை பள்ளி வளாகத்தில் ஆசிரியை கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #KurinjipadiMurder
    குறிஞ்சிப்பாடி:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சின்னக் கடை வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் ரம்யா(வயது 23). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

    ரம்யா இன்று காலை வீட்டில் இருந்து பள்ளிக்கு நடந்து சென்றார். காலை 8 மணியளவில் ரம்யா பள்ளியை சென்றடைந்தார். அப்போது பள்ளிக்கு மற்ற ஆசிரியர்கள், ஊழியர்கள் யாரும் வரவில்லை. பள்ளி வளாகத்தில் ரம்யா தனியாக நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த மர்மவாலிபர் தனியாக நின்று கொண்டிருந்த ரம்யாவை சரமாரியாக தாக்கினார்.

    பின்னர் அவரை ஆட்டை அறுப்பதை போல் அவரது கழுத்தை அறுத்து படுகொலை செய்தார். இதில் ரம்யா பலத்தகாயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    பின்னர் அந்த மர்மவாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதன்பின்னர் பள்ளிக்கு வந்த ஆசிரியை ஒருவர் ரம்யா இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் இந்ததகவலை பள்ளி நிர்வாகத்துக்கும், குறிஞ்சிப்பாடி போலீசாருக்கும் தெரிவித்தார். நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட ரம்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக அந்த பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.


    மேலும் இன்று காலை பள்ளி வேலைநேரத்திற்கு முன்பாகவே ரம்யா வந்தது ஏன்? ரம்யாவை கொலை செய்த மர்மவாலிபர் யார்? அவர் எதற்காக ரம்யாவை கொலை செய்தார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் குற்றவாளி உருவம் ஏதும் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

    ஆசிரியை படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த பள்ளிக்கு இன்று 1 நாள் விடுமுறை விடப்பட்டது.

    ஒருதலை காதல் பிரச்சனையில் ஆசிரியை கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இதுதொடர்பாக வாலிபர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.  #KurinjipadiMurder
    Next Story
    ×