search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொண்டர்களே ஆராய்ந்தால் வழிநடத்த தலைவன் எதற்கு?- ரஜினிகாந்த் மீது சீமான் பாய்ச்சல்
    X

    தொண்டர்களே ஆராய்ந்தால் வழிநடத்த தலைவன் எதற்கு?- ரஜினிகாந்த் மீது சீமான் பாய்ச்சல்

    தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனையில் தொண்டர்களே ஆராய்ந்தால் வழி நடத்த தலைவன் எதற்கு? என்று ரஜினிகாந்த் மீது சீமான் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். #NaamThamizharKatchi #Seeman #Rajinikanth
    திருச்சி:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காஷ்மீரில் மத்திய அரசின் மோசமான கவனக்குறைவால் தான் பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின் நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் மக்களை பதற்ற நிலையிலேயே வைத்திருக்கிறது.

    ‘நீட்’ தேர்வு எழுத செல்லும் மாணவ-மாணவிகளை கடுமையாக சோதனை செய்தனர். ஆனால் 350 கிலோ வெடி மருந்து ஏற்றி வந்த வாகனத்தை சோதிக்காமல் என்ன செய்தார்கள். பாதுகாப்பு படை வீரர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் மக்கள் அச்சப்பட வேண்டியிருக்கிறது.

    தேர்தல் நேரத்தில் மட்டும் தான் வெடிகுண்டு வெடிக்கிறது. இதை வைத்து பா.ஜ.க. அரசியல் செய்ய நினைக்கிறது.

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை எனவும், தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனையை யார் தீர்ப்பார்களோ? அவர்களை ஆராய்ந்து வாக்களியுங்கள் என ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தனது தொண்டர்களுக்கு கூறியுள்ளார்.

    தண்ணீர் பிரச்சனையை யார் தீர்ப்பார்கள் என்று ரஜினிகாந்த் தான் தொண்டர்களுக்கு சொல்ல வேண்டும். தொண்டர்களே ஆராய்வதற்கு தலைவன் எதற்கு?. தலைவன் தான் தொண்டர்களுக்கு வழிகாட்ட வேண்டும். ஆனால் அந்த வழி இல்லாதது ஒரு கேள்வியாக எழுகிறது.



    சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் போட்டியிடட்டும். அப்போது அவர் வந்து தீர்ப்பாரா? என்று பார்ப்போம். போர் வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என ரஜினிகாந்த் கூறினார். தற்போது எல்லையில் போர் வருகிற சூழல் ஏற்பட்டுள்ளது. அங்கு ரஜினிகாந்த் செல்லட்டும்.

    அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி என்பது அவர்கள் ஏற்கனவே முடிவு செய்தது. அதனால் தான் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நீடிக்கிறது. இல்லையென்றால் எப்போதோ கலைத்திருப்பார்கள். பாராளுமன்ற தேர்தலில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை மாநில கட்சிகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும்.

    தமிழக அரசு ரூ.2 ஆயிரம் வழங்க இருக்கும் திட்டம் தேர்தலுக்காக தான். நேரடியாக கொடுக்க முடியாது என்பதால் மறைமுகமாக கொடுக்க உள்ளனர். நடிகர் கமல்ஹாசனின் முடிவு என்ன என்பது தெளிவாக இல்லை. அ.தி.மு.க., தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டாம் என கமல்ஹாசன் கூறியதை வரவேற்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #NaamThamizharKatchi #Seeman #Rajinikanth
    Next Story
    ×