search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக அமைப்பது ராஜ்ய கூட்டணி, திமுக அமைப்பது பூஜ்ய கூட்டணி- அமைச்சர் ஆர்பி உதயகுமார்
    X

    அதிமுக அமைப்பது ராஜ்ய கூட்டணி, திமுக அமைப்பது பூஜ்ய கூட்டணி- அமைச்சர் ஆர்பி உதயகுமார்

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமைக்கும் கூட்டணி ராஜ்ய கூட்டணி என்றும் தி.மு.க. அமைப்பதோ பூஜ்ய கூட்டணி என்றும் அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேசியுள்ளார். #ADMK #RBUdhayakumar #DMK
    மதுரை:

    மதுரை ரிங் ரோட்டில் உள்ள தனியார் மகாலில் இன்று ஜெயலலிதா பேரவை சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மதுரை மாநகர் மாவட்ட பேரவைச் செயலாளர் சரவணன் எம்.எல்.ஏ. வரவேற்றுப் பேசினார்.

    புறநகர் மாவட்ட பேரவைச் செயலாளர் தமிழரசன், மாநில பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, பெரியபுள்ளான், மாணிக்கம், நீதிபதி ஆகியோர் பேசினர்.

    கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    அ.தி.மு.க. அரசு நிலைக்குமா? ஜெயலலிதாவின் திட்டங்களை நிறைவேற்ற முடியுமா? என்று கேள்வி கேட்டவர்களுக்கு முதல்வரும், துணை முதல்வரும் பதிலடி கொடுத்துள்ளார்கள்.

    ஏளனம் பேசியவர்களை எல்லாம் ஏறெடுத்து பார்க்க வைத்துள்ளோம். அதற்கு காரணம் கர்வமில்லாத முதல்வரும், துணை முதல்வரும் தான்.

    ஜெயலலிதா காட்டிய அறவழியில் தொண்டர்களோடு இணைந்து அ.தி.மு.க. ஆட்சி நடந்து வருகிறது. யாரும் பிறக்கும்போது தலைவர்களாக பிறக்கவில்லை. மக்கள் பணி மூலமும், பொதுப்பணி மூலமும் தலைவர்களாக முதல்வரும், துணை முதல்வரும் உயர்ந்திருக்கின்றனர்.

    தி.மு.க. தலைவர் ஸ்டாலின், டி.டி.வி. தினகரன் செய்யும் பொய் பிரசாரத்தை முறியடிப்பது அம்மா பேரவையின் நோக்கமாகும்.

    தாலிக்கு தங்கம், ரூ.50 ஆயிரம் நிதியுதவி என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டம் தற்போது அசாம் மாநிலத்திலும் கொண்டு வரப்பட்டுள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியதன் மூலம் 11 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப்பெற உள்ளது.



    ஸ்டாலின் ஊர், ஊராக சென்று கிராம சபை கூட்டம் நடத்தி அ.தி.மு.க. குறித்து பொய் பிரசாரம் செய்கிறார். ஸ்டாலின் கிராம சபை கூட்டத்துக்கு கூட்டம் வரவில்லை.

    தி.மு.க. ஆட்சியில் முதியோர் ஓய்வூதியத்துக்கு ரூ.1,500 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது அ.தி.மு.க. அரசு ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது.

    கடுமையான நிதிச் சுமையிலும், பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்கியவர்கள் முதல்வரும், துணை முதல்வரும் தான்.

    தமிழகத்தில் காவல் துறையை நவீனமாக்க ரூ.8 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அமைப்புசாரா தொழில்களில் ஈடுபடும் 60 லட்சம் குடும்பத்திற்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் திட்டம் முதல்வரும், துணை முதல்வரும் மதி நுட்பத்துடன் செயல்படுத்தி வழங்க உள்ளார்கள்.

    ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை எதிர்த்து தி.மு.க. நீதிமன்றம் சென்றால் அவர்கள் எப்படி மக்களிடம் வர முடியும்?

    ஜாக்டோ-ஜியோ போராட்டம் நடத்தியும், அவர்களை அரவணைத்து பட்ஜெட்டில் ஆசிரியர்களுக்கு ரூ.85 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் உதவாக்கரை பட்ஜெட் என கூறியுள்ளார். எல்லோரும் பட்ஜெட்டை வரவேற்றுள்ளனர்.

    இந்தியாவில் உள்ள 29 முதல் அமைச்சர்களிலேயே அதிக தூரம் பயணம் செய்து மக்களை சந்தித்து அதிக கோப்புகளில் கையெழுத்திட்டு திட்டங்களை செயல்படுத்தி வருபவர் நமது முதல்-அமைச்சர்.

    அம்மா அரசின் திட்டங்கள் அனைத்து மக்களையும் சென்றடைந்துள்ளது. எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். அ.தி.மு.க. அமைக்கும் கூட்டணி ராஜ்ய கூட்டணி. தி.மு.க. அமைப்பதோ பூஜ்ய கூட்டணி ஆகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்ட நிர்வாகிகள் ராஜேந்திரன், அய்யப்பன், பகுதி செயலாளர்கள் முத்திருளாண்டி, மாரிச்சாமி, மாநில இணைச் செயலாளர்கள் இளங்கோவன், முகில், சதன் பிரபாகரன், ரமேஷ், ராஜசேகர், வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், மார்க்கெட் செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர். #ADMK #RBUdhayakumar #DMK
    Next Story
    ×