search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு
    X

    வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு

    வைகை அணை நீர் மட்டம் 50 அடிக்கு கீழ் குறைந்த நிலையில் பாசனத்துக்காக இன்று முதல் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
    கூடலூர்:

    வடகிழக்கு பருவமழை ஏமாற்றியதால் பெரியாறு, வைகை அணைகளின் நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து வந்தது. பாசனத்துக்காகவும், குடிநீருக்காகவும் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் நீர் மட்டமும் குறைந்து கொண்டே வந்தது. அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் அது நீர் மட்டத்தை உயர்த்தவில்லை.

    இந்நிலையில் 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 49.98 அடியாக குறைந்தது. அணைக்கு 6 கன அடி மட்டுமே தண்ணீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 60 கன அடி மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை முதல் கூடுதலாக 700 கன அடி சேர்த்து மொத்தம் 760 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    இந்த தண்ணீர் கள்ளந்திரி பாசனத்துக்கு திறந்து விடப்படுவதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே 50 அடிக்கு கீழ் நீர் மட்டம் குறைந்து விட்ட நிலையில் தற்போது கூடுதலாக தண்ணீர் திறக்கப்படுவதால் மேலும் நீர் மட்டம் சரியும் நிலை ஏற்பட்டுள்ளது.

    பெரியாறு அணையின் நீர் மட்டம் 115.60 அடியாக உள்ளது. நீர் வரத்து முற்றிலும் நின்று விட்டது. அணையில் இருந்து 300 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இருப்பு 1835 மல்லியன் கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 39.15 அடி. சோத்துப்பாறை நீர் மட்டம் 88.39 அடி.

    Next Story
    ×