search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் அதிமுக-பா.ஜனதா கூட்டணி உறுதி
    X

    பாராளுமன்ற தேர்தலில் அதிமுக-பா.ஜனதா கூட்டணி உறுதி

    பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தற்போது அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெறுவதன் மூலம் அ.தி.மு.க. -பா.ஜனதா கூட்டணி உறுதியாகி விட்டது. #ParliamentElection #ADMK #BJP
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. பிரதான கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க.வில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்படைந்துள்ளன.

    இந்த தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜனதா இடையே கூட்டணி அமைகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா எந்த கட்சியுடனும் கூட்டணி சேராமல் தனித்து போட்டியிட்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்றார்.

    ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா நெருக்கம் காட்டி வந்தது. அ.தி.மு.க.வில் நெருக்கடி ஏற்பட்டபோது அரசுக்கு பல்வேறு வகையில் பா.ஜனதா பக்க பலமாக செயல்பட்டது.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கு பா.ஜனதா ஆயத்தமான போது தமிழக மூத்த அமைச்சர்கள் டெல்லி சென்று பா.ஜனதா தலைவர்களையும், மத்திய மந்திரிகளையும் சந்தித்து ரகசியமாக பேச்சு நடத்தினார்கள்.

    அவர்கள் கூட்டணி தொடர்பாக பேச்சு நடத்தியதாக கூறப்பட்டது. இதன் மூலம் அ.தி.மு.க. - பா.ஜனதா கூட்டணி ஏற்படும் என தகவல் வெளியானது. ஆனால் பா.ஜனதாவுடன் கூட்டணி சேர அ.தி.மு.க.வில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். என்றாலும் கூட்டணி பேச்சுவார்த்தையை ரகசியமாக நடத்தி வந்தனர்.

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா அதிக இடங்களை கேட்டது. இதற்கு அ.தி.மு.க. தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் பா.ஜனதாவுக்கு உள்ள மக்கள் செல்வாக்கு அடிப்படையில்தான் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    பா.ஜனதா 12 தொகுதிகள் கேட்டது. குறிப்பாக மேற்கு மண்டலத்தில் அதிக தொகுதிகளில் போட்டியிட விரும்பியது. இதற்கும் அ.தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்தது.

    ஒற்றை இலக்க எண்ணில்தான் சீட் தர முடியும். அதுவும் நாங்கள் தரும் தொகுதிகளில்தான் போட்டியிட வேண்டும் என்று அ.தி.மு.க. நிபந்தனை விதித்தது. இதனால் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது.

    இந்த நிலையில் கூட்டணியை உறுதி செய்வதற்காக பா.ஜனதா மேலிட பிரதிநிதியான மத்திய மந்திரி பியூஷ்கோயல் நேற்று இரவு 8.40மணிக்கு விமானம் மூலம் சென்னை வந்தார்.

    அவர் விமான நிலையத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் அறையில் தமிழக தேர்தல் கூட்டணி தொடர்பாக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். சுமார் 40 நிமிடங்கள் இந்த ஆலோசனை நடந்தது.



    பின்னர் விமான நிலையத்தில் மத்திய மந்திரி பியூஷ் கூறுகையில், தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த வந்திருப்பதாகவும், எங்கள் கூட்டணி வலிமையானதாக இருக்கும், இங்கு பெறும் வெற்றி மோடி அரசாங்கத்துக்கு வலு சேர்க்க கூடியதாக இருக்கும் என்று தெரிவித்தார்.

    அதன் பிறகு மத்திய மந்திரி பியூஷ்கோயல் காரில் புறப்பட்டு நேராக ஆழ்வார்பேட்டையில் உள்ள தொழில் அதிபர் மகாலிங்கம் வீட்டுக்கு சென்றார்.

    அங்கு அவர் முன்னிலையில் அ.தி.மு.க.- பா.ஜனதா இடையே அதிகாரப்பூர்வமான முறையில் கூட்டணி உடன்பாடு மற்றும் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடந்தது. அ.தி.மு.க. தரப்பில் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி மற்றும் வைத்திலிங்கம் எம்.பி., கே.பி. முனுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பா.ஜனதா தரப்பில் தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர். இரவு 10 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை அதிகாலை 1 மணி வரை 3 மணி நேரம் நீடித்தது.

    இதில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மட்டும் 1 மணி நேரம் நடந்தது. அ.தி.மு.க.வின் கருத்துக்களும், விருப்பங்களும் மத்திய மந்திரி பியூஷ்கோயலிடம் எடுத்துக் கூறப்பட்டது. அதை கவனமாக கேட்டார். பின்னர் அவர் பா.ஜனதாவின் விருப்பத்தையும், பிரதமர் மோடி சொன்ன தகவல்களையும் அ.தி.மு.க.வினரிடம் எடுத்துக் கூறியதாக கூறப்படுகிறது.

    பா.ஜனதா தரப்பில் முதலில் 12 தொகுதிகள் கேட்கப்பட்டது. பின்னர் 10 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டது. இறுதியாக 8 தொகுதிகள் வரை கொடுக்க அ.தி.மு.க. முன் வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    பா.ஜனதா தரப்பில் தென்சென்னை, ஸ்ரீபெரும்புதூர், வேலூர், திருப்பூர், கோவை, கன்னியாகுமரி, தஞ்சை, சிவகங்கை, நெல்லை, மதுரை ஆகிய 10 தொகுதிகளை பா.ஜனதா கேட்டதாகவும், இதில் தென்சென்னை, தஞ்சை, மதுரை, நெல்லை ஆகிய தொகுதிகளை தர அ.தி.மு.க. மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதற்கு பா.ஜனதா சம்மதிக்கவில்லை. தனது நிலையில் பிடிவாதமாக இருந்ததால் நேற்றைய பேச்சு வார்த்தையில் தொகுதி உடன்பாடு எட்டப்படவில்லை.



    இதனால் இறுதியாக அ.தி. மு.க. ஒருங்கிணைப்பாளர்களான முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் பேச்சு நடத்தி விரைவில் தொகுதி உடன்பாடு காண முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இன்று மத்திய மந்திரி நிதின்கட்கரி சென்னை வருகிறார். அவரும் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. குழுவுடன் பேச்சு நடத்துகிறார்.

    அதன்பிறகு நாளை மத்திய மந்திரி பியூஷ்கோயல் மீண்டும் சென்னை வந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை சந்தித்து பேச திட்டமிட்டு இருக்கிறார்.

    இதில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு விடும் என்றும் அடுத்த வாரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

    பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி பியூஷ்கோயல் ஆகியோர் சென்னை வந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அ.தி.மு.க. குழுவுடன் இணைந்து தொகுதி பங்கீடு அறிவிப்பை வெளியிடுகிறார்கள்.

    தற்போது அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெறுவதன் மூலம் அ.தி.மு.க. -பா.ஜனதா கூட்டணி உறுதியாகி விட்டது. தொகுதி உடன்பாடு மட்டுமே இறுதி செய்யப்பட உள்ளது.

    இதுபற்றி மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், “தமிழகத்தில் பா.ஜனதா வலுவான கூட்டணி அமைக்கும். அ.தி.மு.க.வுடன் பேச்சு வார்த்தை சுமூகமான முறையில் நடைபெற்று வருகிறது. மத்திய மந்திரி பியூஷ்கோயல் அ.தி.மு.க.வுடன் பேச்சு நடத்தி உள்ளார். தொகுதி பங்கீடு பற்றி தொடர்ந்து பேசி முடிவு செய்வோம்” என்றார்.

    தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது, “தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிப்பதுதான் எங்கள் இலக்கு. அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதும் எங்கள் இலக்கு. இதற்காக பல கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருகிறோம்” என்றார்.

    இதற்கிடையே புதுவை என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி நேற்று இரவு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

    அப்போது, “அ.தி.மு.க. கூட்டணியில் தான் நாங்கள் இருக்கிறோம். கடந்த தேர்தலைப் போல இந்த தேர்தலிலும் புதுச்சேரி தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. #ParliamentElection #ADMK #BJP 
    Next Story
    ×