search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூர் தொகுதியில் நான் மீண்டும் போட்டியிட உத்தரவாதம் இல்லை- தம்பிதுரை
    X

    கரூர் தொகுதியில் நான் மீண்டும் போட்டியிட உத்தரவாதம் இல்லை- தம்பிதுரை

    அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை விருப்ப மனு அளித்துள்ளதால் கரூர் தொகுதியில் தான் மீண்டும் போட்டியிட உத்தரவாதம் இல்லை என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார். #ThambiDurai #ADMK
    கரூர்:

    கரூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக அ.தி.மு.க.வை சேர்ந்த தம்பிதுரை இருந்து வருகிறார். இவர் பாராளுமன்ற துணை சபாநாயகர் பதவியையும் வகித்து வருகிறார்.

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தம்பிதுரை கடந்த சில மாதங்களாக கரூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டு, மனுக்களை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. சார்பில் பாராளுமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்ப மனு செய்துள்ளார். இதனிடையே விருப்ப மனு தாக்கலின் கடைசி நாளான நேற்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பியும் கரூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார்.

    தம்பிதுரை கரூர் தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வரும் நிலையில் அமைச்சரின் தந்தையும் அதே தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இது தொடர்பாக நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்த தம்பிதுரை, ஜனநாயக நாட்டில் அரசியலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்றார். இந்த நிலையில் இன்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட சீத்தப்பட்டி காலனி பகுதியில் தம்பிதுரை எம்.பி. பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு, மனுக்களை பெற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். கரூர் பாராளுமன்ற தொகுதியில் நான் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளேன். எனக்கு சீட் கிடைக்கும் என்று எந்த உத்தரவாதமும் கிடையாது. சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பியும் கரூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

    அவருக்கு கரூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் அவரது வெற்றிக்காக பாடுபடுவேன். அ.தி.மு.க. சார்பில் யார் போட்டியிட்டாலும் வெற்றிக்கு அயராது உழைப்பேன்.

    தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க அ.தி.மு.க. சார்பில் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் நான் இடம்பெறவில்லை. அதனால் நான் கூட்டணி குறித்து எதுவும் சொல்ல முடியாது. பாராளுமன்றத்தில் தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தோம். அதற்கும் கூட்டணிக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் நிருபர்கள் அவரிடம் திருப்பூர் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சிகள் எல்லாம் கலப்பட கூட்டணி அமைத்துள்ளது என்று விமர்சனம் செய்துள்ளாரே? என்று கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதில் அளித்த தம்பிதுரை, தேர்தல் கூட்டணி என்றாலே கலப்பட கூட்டணிதான் என்றார். #ThambiDurai #ADMK
    Next Story
    ×