search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாத்தனூர் அணையில் தினமும் 1.60 லட்சம் யூனிட் மின் உற்பத்தி
    X

    சாத்தனூர் அணையில் தினமும் 1.60 லட்சம் யூனிட் மின் உற்பத்தி

    சாத்தனூர் அணையில் இருந்து பாசன நீர் வெளியேற்றப்படுவதால் புனல் மின் நிலையத்தில் தினமும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் யூனிட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள சாத்தனூர் அணையின் உயரம் 119 அடி. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் அணையில் 96 அடி மட்டுமே தண்ணீர் இருந்தது. இந்நிலையில் அணையில் இருந்து பாசனத்திற்காக வலதுபுற கால்வாயில் இருந்து 200 கன அடி தண்ணீரும், இடதுபுற கால்வாயில் இருந்து 150 கன அடி நீரும் கடந்த ஜனவரி 23-ந் தேதி முதல் திறக்கப்பட்டது.

    அன்று முதல் இங்குள்ள புனல் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டு தண்டராம்பட்டு மின் தொகுப்பில் சேர்க்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படும்போதும் மற்றும் பாசனத்திற்காக நீர் திறக்கும்போதும் புனல் மின்நிலையம் இயங்கும்.

    தமிழக அரசு 40 நாட்கள் மட்டுமே பாசன நீர் திறக்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி ஜனவரி 23-ந் தேதி முதல் வரும் மார்ச் 4-ந் தேதி வரை பாசன நீர் திறக்கப்படும். அந்த 40 நாட்கள் மட்டுமே மின் உற்பத்தியும் இங்கு நடைபெறும். அணையில் இருந்து பாசன நீர் வெளியேற்றப்படுவதால் புனல் மின் நிலையத்தில் தினமும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் யூனிட் மின் உற்பத்தி நடக்கிறது.

    பாசனத்துக்காக நீர் திறப்பதற்கு முன் அதாவது ஜனவரி 23-ந் தேதி அணையின் நீர் மட்டம் 96.20 அடி (கொள்ளளவு 3,222 மில்லியன் கன அடி) ஆகும். நேற்று 10 அடி நீர்மட்டம் குறைந்தது. 86.05 அடி (கொள்ளளவு 2,047 மில்லியன் கன அடி) ஆக இருந்தது. இதற்கிடையில் திருக்கோவிலூர் ஆயக்கட்டு பகுதிக்காக 10 நாட்கள் அணையில் இருந்து 600 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. திறப்பு இன்றுடன் நிறுத்தப்பட்டது.

    கடந்த ஆண்டு இதே நாளில் சத்தனூர் அணை முழுவதும் நிரம்பியிருந்ததால் 95 நாட்கள் பாசன நீர் திறக்கப்பட்டது. இந்தாண்டு பருவமழை பொய்த்துப்போனதால் அணையில் நீர் மட்டம் குறைவாக இருப்பதால் 40 நாட்கள் மட்டுமே பாசன நீர் திறக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பாசன நீர் திறக்கப்பட்டதால் திருவண்ணாமலை தாலுகாவில் 20 ஏரிகளிலும், தண்டராம்பட்டு தாலுகாவில் 10 ஏரிகளிலும் 60 சதவீத அளவு நீர் இருப்பு உள்ளது.

    Next Story
    ×