search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செங்கல்பட்டு அருகே போலீஸ் மிரட்டியதால் வாலிபர் தற்கொலை - உறவினர்கள் மறியல்
    X

    செங்கல்பட்டு அருகே போலீஸ் மிரட்டியதால் வாலிபர் தற்கொலை - உறவினர்கள் மறியல்

    செங்கல்பட்டு அருகே போலீஸ் மிரட்டியதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அருகே உள்ள புலிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் ஜெயக்குமார். தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 2 மாதத்துக்கு முன்பு ஜெயக்குமார் தரப்பினருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து இரு தரப்பினரும் செங்கல்பட்டு தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இதில் எதிர்தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் ஜெயக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் ஜெயக்குமார் ஜாமீனில் வெளியே வந்த பின்னரும் அவரது நண்பர்கள் குறித்து போலீசார் அவரிடம் அடிக்கடி விசாரித்தனர். அவர்களை அடையாளம் காட்டும்படி மிரட்டியதாக தெரிகிறது. மேலும் கொடுத்த புகாரை வாபஸ் பெறும்படி நிர்பந்தித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனவேதனை அடைந்த ஜெயக்குமார் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

    போலீசார் மிரட்டியதால் தான் ஜெயக்குமார் தற்கொலை செய்ததாக கூறி அவரது உறவினர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை சென்னை-திருச்சி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் புறவழிச் சாலை வழியாக திருப்பி விடப்பட்டது.

    டி.எஸ்.பி. கந்தன், இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து ஜெயக்குமாரின் உறவினர்கள் கூறும்போது, “போலீசாரின் மிரட்டலால்தான் ஜெயக்குமார் தற்கொலை செய்து உள்ளார். இதில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

    Next Story
    ×