search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுமி கார்த்திகா ஓவியம் வரையும் காட்சி.
    X
    சிறுமி கார்த்திகா ஓவியம் வரையும் காட்சி.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நிலையிலும் வண்ண ஓவியங்கள் வரையும் சுரண்டை சிறுமி

    மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சுரண்டை சிறுமி ஓவியம் வரைவதிலும், பாடங்களை படிப்பதிலும் காட்டும் ஆர்வம் அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்டோரை வியப்படைய செய்துள்ளது. #SurandaiGirl
    சுரண்டை:

    நமது வாழ்நாளில் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கிறது. வயது அதிகரிக்கும்போது நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் பலருக்கு பலவிதமான நோய்கள் எளிதாக தாக்கிவிடுகிறது.

    ஆனால் தற்போதைய காலகட்டத்தில் பெரியவர்களுக்கு வரக்கூடிய சில ஆபத்தான நோய்கள் குழந்தைகளுக்கே வந்து விடுகிறது. மேலும் விபத்து உள்ளிட்ட காரணங்களால் தவிர்க்க முடியாத ஆபத்தான அறுவை சிகிச்சைகளை குழந்தைகள் எதிர்கொள்ள வேண்டியதாகிவிடுகிறது.

    அப்படி பாதிக்கப்படும் குழந்தைகளின் பெற்றோர் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். ஓடி விளையாட வேண்டிய வயதில் இப்படி ஆகிவிட்டதே என வேதனையடைகிறார்கள். குழந்தைகளுக்கும் அது பெரிய அவதியாகத்தான் இருக்கும். தெருவில் ஓடியாடி விளையாடிவிட்டு, நோய் அவதியால் ஆஸ்பத்திரியில் முடங்கி கிடப்பது மிகப்பெரிய கஷ்டம் தான்.

    ஆனால் தலையில் வந்த கட்டியால் அறுவைசிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில்அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமி, அதைப்பற்றி எந்த கவலையும் கொள்ளாமல் ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டி மகிழ்ச்சியாக பொழுதுபோக்கி வருகிறார்.

    சுரண்டை அருகே உள்ள சேர்ந்தமரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜேந்திரன். இவரது மனைவி குருவம்மாள். இவர்களது மகள் கார்த்திகா. 11வயது சிறுமியான இவள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

    ஓவியம் வரைவதிலும், வண்ணம் தீட்டுவதிலும் திறமைமிக்கவராக விளங்கிவந்த சிறுமி கார்த்திகா, தலைவலியால் மிகவும் அவதிப்பட்டாள். இதையடுத்து அவளை நெல்லை அரசு மருத்துவமனையில் மருத்துவர்களிடம் காண்பித்தனர். அவர்கள் பரிசோதனை செய்ததில், சிறுமியின் தலையில் ஒரு கட்டி இருப்பது தெரியவந்தது.

    அதனை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து கார்த்திகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். சிறுமிக்கு அறுவைசிகிச்சை நடக்கும் நாள் இன்றும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் அவள் கடந்த 20 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

    சிறுமி வரைந்துள்ள ஓவியங்களை படங்களில் காணலாம்.

    ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் பள்ளிக்கு செல்ல முடியவில்லை என்றும், தோழிகளுடன் விளையாட முடியவில்லை என்றும் சிறுமி கார்த்திகாவுக்கு வருத்தம் இருந்துள்ளது. அவள் தான் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டுக்கு வெளியே வராண்டாவில் அமர்ந்து தனக்கு பிடித்தமான ஓவியங்களை வரைந்து வருகிறார். மேலும் தனது பாட புத்தகங்களையும் படித்து வருகிறாள்.

    மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமி ஓவியம் வரைவதிலும், பாடங்களை படிப்பதிலும் காட்டும் ஆர்வம் அங்குள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரை வியப்படைய செய்துள்ளது.  #SurandaiGirl
    Next Story
    ×