search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆரல்வாய்மொழி அருகே அடுத்தடுத்து விபத்து - 2 பேர் பலி
    X

    ஆரல்வாய்மொழி அருகே அடுத்தடுத்து விபத்து - 2 பேர் பலி

    ஆரல்வாய்மொழி அருகே அடுத்தடுத்து ஏற்பட்ட விபத்தில் 2 பேர் பலியாகினர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    ஆரல்வாய்மொழி வடக்கூர் பகுதியை சேர்ந்தவர் ஹரிகரசுதன் (வயது 34). இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு திருமணம் முடிந்து 6 மாத கைக்குழந்தை உள்ளது.

    ஹரிகரசுதன் குமாரபுரத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். நேற்று ஆரல்வாய்மொழியில் இருந்து நாகர்கோவிலுக்கு பொருட்கள் வாங்க மோட்டார் சைக்கிளில் வந்திருந்தார்.

    பின்னர் பொருட்கள் வாங்கி விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். வெள்ளமடத்தை அடுத்த விசுவாசபுரம் வரும்போது எதிரே வந்த வேன் ஒன்று அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி ஹரிகரசுதன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்...

    ஆரல்வாய்மொழியை சேர்ந்தவர் தேவஇறக்கம் (வயது 75). இவர் நேற்று தோவாளை அருகே உள்ள கிறிஸ்தவ சபைக்கு சென்றிருந்தார். பின்னர் அவர் வீடு திரும்புவதற்காக ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அவருக்கு பின்னால் வந்த கார் ஒன்று அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட தேவஇறக்கம் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தேவஇறக்கம் பரிதாபமாக இறந்தார். சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து தேவஇறக்கம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார் யாருடையது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×