search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணி - கலெக்டர் ரோகிணி தொடங்கி வைத்தார்
    X

    குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணி - கலெக்டர் ரோகிணி தொடங்கி வைத்தார்

    சேலம் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணியை கலெக்டர் ரோகிணி நேற்று தொடங்கி வைத்தார்.
    சேலம்:

    பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி சேலம் கோட்டை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் ரோகிணி கலந்து கொண்டு மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி தொடங்கி வைத்தார்.

    பின்னர், மாணவிகள் முன்னிலையில் கலெக்டர் ரோகிணி, மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பூங்கொடி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி ஆகியோரும் குடற்புழு நீக்க மாத்திரைகளை சாப்பிட்டனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ரோகிணி கூறியதாவது:-

    மத்திய அரசால் ஆண்டுக்கு இருமுறை (6 மாதத்திற்கு ஒரு முறை) நாடு தழுவிய குடற்புழு நீக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான முதல் சுற்று தற்போது தொடங்கி உள்ளது. இதன்படி 1 வயது முதல் 19-வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் அல்பெண்டசோல் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது.

    உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கின்படி, இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ரத்த சோகையினால் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

    கழிவறைகளை பயன்படுத்துதல், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்தல், சுத்தமான குடிநீர், காய்கறி பழங்களை சுத்தம் செய்தபின் உட்கொள்ளுதல், காலணிகளை அணிதல், உணவுக்கு முன், பின் மற்றும் கழிவறையைப் பயன்படுத்திய பின் சோப்புப்போட்டு கைகளை கழுவுதல் ஆகிய பழக்கங்களை கடைபிடிப்பதன் மூலம் குடற்புழு தொற்று ஏற்படுவதை தடுக்கலாம்.

    இத்திட்டத்தில் மூலம் சேலம் மாவட்டத்தில் 12 லட்சத்து 16 ஆயிரத்து 326 குழந்தைகள் பயனடைய உள்ளனர். அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பள்ளி செல்லா குழந்தைகளுக்கு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் மூலம் இக்குடற்புழு நீக்க மாத்திரை இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

    பொது சுகாதாரத்துறை, பள்ளி கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டம் உள்ளிட்ட அனைத்து துறைகளைச் சார்ந்த 6 ஆயிரத்து 984 பணியாளர்கள் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். மேலும், விடுபட்ட குழந்தைகளுக்கு வருகிற 14-ந் தேதி அன்று அல்பெண்டசோல் மாத்திரை வழங்கப்பட உள்ளது.

    இவ்வாறு கலெக்டர் ரோகிணி கூறினார். 
    Next Story
    ×