search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பு 2 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
    X

    பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பு 2 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

    கிருஷ்ணா நதி கால்வாயில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது.
    ஊத்துக்கோட்டை:

    தமிழகத்தில் கடந்த ஆண்டு எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. இதனால் ஏரி, குளங்களில் தண்ணீர் இருப்பு வெகுவாக குறைந்து உள்ளது.

    இதே போல் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளிலும் நீர் இருப்பு குறைந்து வேகமாக வறண்டு வருகின்றன.

    இந்த 4 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 257 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். ஆனால் தற்போது வெறும் 949 மி.கன அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீரை கொண்டு இன்னும் ஒரு மாதத்துக்கு மட்டுமே சென்னைக்கு குடிநீர் சப்ளை செய்ய முடியும்.

    இதையடுத்து மாற்று வழியில் தண்ணீரை பெறும் நடவடிக்கையை குடிநீர் வாரிய அதிகாரிகள் செயல்படுத்தி வருகிறார்கள்.

    கடந்த மாதம் 9-ந் தேதி ஜதராபாத்தில் நடந்த கிருஷ்ணா நதி நீர் மேலாண்மை வாரிய கூட்டத்தில் தமிழக பொதுப் பணித்துறையை சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் கிருஷ்ணா நீர் ஒப்பந்தப்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடும்படி வேண்டுகோள் விடுத்தனர்.

    இதே போல் தண்ணீர் இன்றி கருகி வரும் நெற்பயிர்களை காப்பாற்ற தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் திறந்து விடும்படி ஆந்திர விவசாயிகளும், ஆந்திர அரசுக்குக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர்.

    இந்த கோரிக்கையை ஏற்று ஆந்திர அரசு நேற்று காலை கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா தண்ணீரை திறந்து விட்டது. முதலில் வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறந்தவிடப்பட்டது. இந்த தண்ணீர் கிருஷ்ணா கால்வாயில் பூண்டி ஏரியை நோக்கி பாய்ந்து வருகிறது.

    இன்று காலை 6 மணிக்கு கூடுதலாக 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

    தற்போது கிருஷ்ணா நதி கால்வாயில் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது.

    ஆந்திர விவசாயிகள் சாகுபடி செய்ய தண்ணீர் எடுத்த பின்னர் தமிழக எல்லைக்கு கிருஷ்ணா தண்ணீர் வர உள்ளது. கூடுதலாக திறக்கப்பட்டு உள்ளதால் இன்னும் 3 நாட்களில் தமிழக எல்லையை கிருஷ்ணா தண்ணீர் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் செல்லும்.

    கிருஷ்ணா தண்ணீர் திட்டத்தின்படி ஆந்திர அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி.யும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி.யும் தண்ணீர் வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×