search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கோவையில் பார்சல் சர்வீஸ் நிறுவன ஊழியரை தாக்கி 8 கிலோ தங்கம் கொள்ளை

    கோவையில் இன்று காலை நகரின் முக்கிய பகுதியில் பார்சல் சர்வீஸ் ஊழியரை தாக்கி 8 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #8KgGoldRobbery
    கோவை:

    கோவை மரக்கடை மில் ரோட்டில் தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனம் உள்ளது.

    கோவையில் உள்ள பல்வேறு நகைகடைகளில் இருந்து தங்க நகைகளை இந்த பார்சல் சர்வீஸ் நிறுவனம் மூலமாக விமானத்தில் வெளி மாநிலங்களில் உள்ள நகை கடைகளுக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.

    அதன்படி நிறுவன ஊழியரான ராஜஸ்தானை சேர்ந்த பிரித்விசிங்(வயது 26) என்பவர் இன்று அதிகாலை 5.30 மணிக்கு மொத்தம் 8 கிலோ தங்க நகைகளை பார்சல் செய்து மோட்டார் சைக்கிளில் விமான நிலையத்துக்கு புறப்பட்டார்.

    பீளமேட்டில் சர்தார் வல்லபாய் படேல் கல்லூரி அருகே பிரித்வி சிங் சென்று கொண்டிருந்த போது அவரது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் திடீரென பிரித்வி சிங்கின் மோட்டார் சைக்கிள் மீது மோதினர். இதில் நிலை குலைந்து அவர் கீழே விழுந்தார். எனினும் உடனடியாக எழுந்து தங்க நகைகள் இருந்த பையை எடுத்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களும் பிரித்வி சிங்கின் கண்ணில் மிளகாய் பொடியை தூவியதோடு, ஆயுதங்களால் அவரை தாக்கி சாக்கடையில் தள்ளி விட்டனர். பின்னர் 8 கிலோ நகைகளை கொள்ளையடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

    இச்சம்பவத்தில் காயமடைந்த பிரித்வி சிங் பீளமேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களும் ஹெல்மெட் அணிந்திருந்ததாக பிரித்வி சிங் கூறினார்.



    கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு ரூ.2½ கோடி ஆகும். இந்த நகைகள் பல்வேறு கடைகளின் உரிமையாளர்களுக்கு சொந்தமானது. பிரித்விசிங் வழக்கமாக அதிகாலை நேரத்தில் நகைகளை கொண்டு செல்வதை அறிந்தே வாலிபர்கள் அவரை பின்தொடர்ந்து வந்து தாக்கி கொள்ளையடித்துள்ளனர்.

    அவினாசி சாலையில் பல்வேறு இடங்களிலும் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்கள் யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #8KgGoldRobbery
    Next Story
    ×