search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை குடிநீர் தேவைக்கு கிருஷ்ணா தண்ணீர் இன்று திறப்பு
    X

    சென்னை குடிநீர் தேவைக்கு கிருஷ்ணா தண்ணீர் இன்று திறப்பு

    சென்னை குடிநீர் தேவைக்கு கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் 3 நாட்களில் தமிழக எல்லைக்கு வந்தடைய வாய்ப்பு உள்ளது.
    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், வீராணம் ஏரிகளில் சேமித்து வைக்கும் தண்ணீரை கொண்டு நிறைவேற்றப்படுகிறது.

    மேலும் மீஞ்சூரில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்திலிருந்து பெறப்படும். தண்ணீர், பூண்டி அருகே உள்ள புல்லரம்பாக்கம், சிறுவானூர்கண்டிகை உட்பட 10 பகுதிகளில் உள்ள ராட்சத ஆழ்துளை கிணறுகளில் இருந்து உறிஞ்சி எடுக்கப்படும் நீர் சென்னை மக்களின் தண்ணீர் தேவையை நிறைவேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    இந்த நிலையில் பருவமழை பொய்த்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்வரப்பு குறைந்து உள்ளது. பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பபாக்கம் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.05 டி.எம்.சி. ஆகும்.

    இந்த ஏரிகளில் தற்போது இருப்பில் உள்ள தண்ணீரை கொண்டு சில நாட்களுக்குதான் சென்னையில் குடிநீர் வினியோகம் செய்ய முடியும்.

    இந்நிலையில் கடந்த 9-ந் தேதி ஜதராபாத்தில் கிருஷ்ணா நதி நீர் மேலாண்மை வாரிய கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் முரளீதரன் தலைமையில் அதிகாரிகள் கலந்துகொண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    அப்போது தண்ணீர் திறந்து விட முடியாத என்று ஆந்திர மாநில பொதுப் பணித்துறை அதிகாரிகள் கூறிவிட்டனர்.

    இந்நிலையில் ஆந்திராவில் உள்ள விவசாயிகள் பருவ மழை பெய்யும் என்ற நோக்கத்தில் நெற்பயிரிட்டனர். ஆனால் மழை பொய்த்து போனதால் தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் கிருஷ்ணா நதி கால்வாயில் தண்ணீர் திறந்து விடும்படி விவசாயிகள் ஆந்திர அரசுக்குக்கு கோரிக்கை விடுத்தனர்.

    இந்த கால்வாய் வழியாகதான் கிருஷ்ணா நதி நீர் பூண்டி ஏரிக்கு பாய்ந்துவரும். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற ஆந்திர அரசு இன்று காலை கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டது. வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கும் வந்து சேருகிறது. நீர்திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று ஆந்திர அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் இன்று காலை வெறும் 949 மில்லியன் கனஅடி தண்ணீர்தான் இருப்பு உள்ளது. இந்த தருணத்தில் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது சென்னை மக்களுக்கு ஆறுதல் தரும் வி‌ஷயமாகும்.

    கண்டலேறு அணையில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் 3 நாட்களில் தமிழக எல்லைக்கு வந்தடைய வாய்ப்பு உள்ளது. அதன் பின்னர் பூண்டி ஏரிக்கு செல்லும்.

    பூண்டி ஏரியில் 3321 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை 6 மணி நிலவரப்படி வெறும் 172 மில்லியன் கனஅடி தண்ணீர்தான் இருப்பில் உள்ளது. கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு ஆண்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு தர வேண்டும். கடந்த ஆண்டு 3.88 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு கிடைத்தது.

    இதற்கிடையே தற்போது கண்டலேறு அணையில் 11.257 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. எனவே இந்த ஆண்டு கிருஷ்ணா தண்ணீர் கூடுதலாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×