search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூர் அருகே தனியார் பள்ளி விடுதியில் பிளஸ்-2 மாணவர் தற்கொலை
    X

    பெரம்பலூர் அருகே தனியார் பள்ளி விடுதியில் பிளஸ்-2 மாணவர் தற்கொலை

    பெரம்பலூர் அருகே தனியார் பள்ளி விடுதியில் பிளஸ்-2 மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    குன்னம்:

    அரியலூர் மாவட்டம் செட்டித்திருக்கோணம் அடுத்த காங்கையார் பேட்டை பகுதியை சேர்ந்தவர் உத்தண்டம். இவரது மனைவி தேன்மொழி. இவர்களது மகன் உதயநிதி (வயது 17).

    இவர் பெரம்பலூர் மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி இருந்து 12-ம் வகுப்பு படித்து வந்தார். அவ்வப்போது ஊருக்கு சென்று வரும் அவர், மற்ற நாட்களில் செல்போன் மூலம் பெற்றோரிடம் பேசுவார். அது போல் நேற்றிரவு செல்போன் மூலம் பெற்றோரிடம் பேசினார்.

    பின்னர் விடுதிக்கு திரும்பினார். சிறிது நேரம் கழித்து அவரது நண்பர்கள் உதயநிதி அறைக்கு சென்றனர். அப்போது அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை தட்டி உதயநிதியை அழைத்த போது, உள்ளே இருந்து எந்த சத்தமும் கேட்கவில்லை.

    இதையடுத்து ஜன்னலை திறந்து பார்த்த போது, உதயநிதி மின் விசிறியில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். அதிர்ச்சியடைந்த மாணவர்கள் இதுகுறித்து விடுதி வார்டனிடம் தெரிவித்தனர். அவர் குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உதயநிதியின் உடலை பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.

    இதனிடையே உதயநிதி தூக்கில் பிணமாக தொங்குவதை அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் விடுதிக்கு விரைந்து சென்றனர். மேலும் உதயநிதியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    மேலும் ஆத்திரத்தில் அங்கிருந்த கண்ணாடி, டேபிள், ஷேர் மின் விளக்குகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். உதயநிதி சாவு குறித்து உரிய விசாரணை நடத்தக் கோரி அப்பகுதியில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் பெரம்பலூர்-அரியலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    போலீசார் மாணவன் சாவு குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் உதயநிதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    உதயநிதி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவில்லை. விடுதியில் தங்கியிருந்து படிக்க விருப்பம் இல்லாததால் தற்கொலை செய்தாரா? அல்லது ஆசிரியர்கள் திட்டியதால் தற்கொலை செய்தாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×