search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை, திருப்பூர், நீலகிரியில் கைதான ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் 150 பேர் சிறையில் அடைப்பு
    X

    கோவை, திருப்பூர், நீலகிரியில் கைதான ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் 150 பேர் சிறையில் அடைப்பு

    கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரியில் போராட்டத்தில் ஈடுப்பட்டு கைதான ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் 150 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். #Jactogeo
    திருப்பூர்:

    9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ சார்பில் வேலை நிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது.

    கோவையில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இவர்களை கைது செய்து பல்வேறு மண்டபங்களில் போலீசார் தங்க வைத்தனர்.

    கைது செய்யப்பட்டவர்களில் 1626 பெண் ஊழியர்கள் உள்பட 1941 பேரை இரவில் விடுவித்தனர். ஆனால் முக்கிய நிர்வாகிகளான சம்பத்குமார், சாமி குணம், சிவம், வெள்ளிங்கிரி உள்பட 42 பேரை விடுவிக்கவில்லை.

    இவர்கள் 42 பேரும் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்கள் ஆவார்கள். இவர்கள் மீது சட்டவிரோதமாக கூடியது, அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், வழிமறித்து தடுத்து இடையூறு ஏற்படுத்துதல், அரசுக்கு எதிராக கலகம் செய்தல் ஆகிய 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    பின்னர் 42 பேரையும் இன்று அதிகாலை கோவை ஜே.எம்.3 மாஜிஸ்திரேட்டு வேலுசாமி முன்பு ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

    நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, பந்தலூர் உள்ளிட்ட இடங்களில் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் மறியலில் ஈடுபட்டனர். ஊட்டி சேரிங் கிராஸ் பகுதியில் மறியல் செய்த ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டு கலெக்டர் பங்களா அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    நீலகிரி மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட 566 அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் நேற்று இரவு விடுவிக்கப்பட்டனர்.

    கூடலூர், பந்தலூர் பகுதியில் கைது செய்யப்பட்ட 63 பேர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று மதியம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள 6 மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    இரவு 10 மணிக்கு அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அம்சராஜ், நிர்வாகிகள் கனகராஜ் உள்பட 45 பேரை போலீசார் விடுவிக்கவில்லை. அவர்களை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் 45 பேரையும் தனியாக திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    இன்று காலை அவர்களை நீதிபதி முன் ஆஜர்படுத்த 2 போலீஸ் வாகனங்களில் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். #Jactogeo
    Next Story
    ×