search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் 31-ந் தேதி வெளியாகிறது
    X

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் 31-ந் தேதி வெளியாகிறது

    ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் வருகிற 31-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    ராமநாதபுரம்:

    இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைக்கிணங்க 1.1.2019 தகுதியேற் படுத்தும் நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் முதலியவற்றுக்கான படிவங்கள் 1.9.2018 முதல் 31.10.2018 வரை பெறப்பட்டன.

    முன்பு அறிவித்த, நீட்டித்த கால அட்டவணையின்படி, இறுதி வாக்காளர் பட்டியல்கள் 21.1.2019 அன்று வெளியிடப்பட்டிருக்க வேண்டும். பிழைகளற்ற வாக்காளர் பட்டியல்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் சேர்த்தல், நீக்கல் குறித்த தகவல்களையும் ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்ளுவதற்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்களின் 2 கூட்டங்கள் நடத்தப்பட்டன.

    இதன் தொடர் நடவடிக்கையாக வாக்காளர் பட்டியல்களில் காணப்படும் தவறுகள், ஒன்று போலுள்ள பதிவுகள் ஆகியவற்றைக் கண்டறிந்து உரிய களவிசாரணை மேற்கொண்டு இரட்டைப்பதிவுகளை நீக்கி, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இ.ஆர்.ஓ. நெட் மென்பொருள் மூலம் அச்சிடும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

    இந்தப் பணிகளுக்கு மேலும் சிறிது கால அவகாசம் தேவைப்படுவதால், இறுதி வாக்காளர் பட்டியல்களை வருகிற 31-ந் தேதி வெளியிட இந்தியத் தேர்தல் ஆணையம் அனுமதியளித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் வருகிற 31-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்படும்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் வீரராகவராவ், தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×