search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முல்லைபெரியாறு அணை பலமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது - தமிழக அதிகாரிகள் தகவல்
    X

    முல்லைபெரியாறு அணை பலமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது - தமிழக அதிகாரிகள் தகவல்

    முல்லைபெரியாறு அணை உறுதியாக இருப்பது ஆய்வின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Mullaperiyar
    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் கேரள எல்லைப்பகுதியில் முல்லைபெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் தேனி, மதுரை மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

    அணையின் உறுதித்தன்மையை அறிய கசிவு நீர் அளவு கணக்கிடப்படுகிறது. கசிவுநீர் ஒழுகும்பாதையில் வீனோட்ஜ் கருவியை கொண்டு மிகத்துல்லியமாக அணையின் உறுதித்தன்மையை கணக்கிடப்படுகிறது. நீர்மட்டம் மற்றும் நீர்கசிவைப்பொறுத்து மாறும் இந்த அளவை பெரியாறு அணையின் பெரியாறு கேலரி பகுதியில் 4 வீனோட்ஜ் கருவிகள் உள்ளன.

    கடந்த ஆண்டு துணைக்குழு கூட்டத்தில் கேலரி பகுதியில் புதிதாக 9 இடங்களில் வீனோட்ஜ் கருவி பொருத்தவேண்டும் என கேரள பிரதிநிதிகள் துணை கண்காணிப்பு குழுவினரிடம் வலியுறுத்தினர். அவர்களின் கோரிக்கைப்படி கடந்த டிசம்பர் மாதம் 9 புதிய வீனோட்ஜ் கருவிகள் கசிவுநீர் பாதையில் பொருத்தப்பட்டது.

    தற்போது அணையை துணைக்குழுவினர் ஆய்வு செய்தனர். அணையின் நீர்மட்டம் 118 அடியாக உள்ளது. எனவே கசிவு நீர்பாதையில் ஆய்வு செய்தபோது துல்லியமாக நிமிடத்திற்கு 38 லிட்டர் கசிவுநீர் வெளியேறுவது உறுதி செய்யப்பட்டது.

    இதுகுறித்து தமிழக அதிகாரிகள் தெரிவிக்கையில், கேரளாவின் ஒவ்வொரு சோதனையிலும் முல்லைபெரியாறு அணை பலமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது நடந்த ஆய்வின்போதும் அது மீண்டும் நிருபிக்கப்பட்டுள்ளது என்றனர். #Mullaperiyar

    Next Story
    ×