search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உறைபனியால் தேயிலை செடிகள் கருகின - மகசூல் பாதிப்பால் வருமானம் இன்றி விவசாயிகள் தவிப்பு
    X

    உறைபனியால் தேயிலை செடிகள் கருகின - மகசூல் பாதிப்பால் வருமானம் இன்றி விவசாயிகள் தவிப்பு

    மஞ்சூர் பகுதியில் தொடர் உறைபனியால் தேயிலை செடிகள் கருகின. இதன் காரணமாக மகசூல் பாதிக்கப்பட்டு வருமானம் இன்றி விவசாயிகள் தவிக்கிறார்கள்.
    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டத்தின் முக்கிய பொருளாதாரமாக விளங்குவது பச்சை தேயிலை விவசாயம். இதனை நம்பி சுமார் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகளும், ஆயிரக்கணக்கான கூலி தொழிலாளர்களும் பிழைப்பு நடத்தி வருகிறார்கள். குறிப்பாக மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளான எடக்காடு, பிக்கட்டி, தங்காடு, காந்தி கண்டி, அட்டுபாயில், இத்தலாரில் தேயிலையை பிரதான தொழிலாக கொண்டு வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஜனவரி 1-ம் தேதி முதல் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உறைபனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது. மேலும் தேயிலை செடிகளின் மீது உறைபனி விழுந்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த பச்சை தேயிலைகள் கருகின.

    தேயிலை செடிகள் கருகியதால் மகசூல் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் போதிய வருமானம் இன்றி தவிக்கிறார்கள். வேலை கிடைக்காததால் தொழிலாளர்களும், விவசாயிகளும் பிழைப்பு தேடி வெளியூர் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் நேற்று மஞ்சூர் அருகே உள்ள எடக்காடு பகுதியில் உறைபனியின் தாக்கம் மிகவும் அதிகளவில் இருந்தது. அங்குள்ள புல்வெளிகளில் உறைபனி படர்ந்து கிடந்தது.

    இதை பார்ப்பதற்கு வெள்ளை வேட்டியை புல்வெளியில் விரித்ததுபோன்று காணப்பட்டது. உறைபனி தாக்கத்தால் இப்பகுதியில் காலை 8 மணி வரை சாலைகள் மற்றும் கடைவீதிகள் வெறிச்சோடி காணப் பட்டன.
    Next Story
    ×