search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேகதாது அணை பிரச்சனையில் எடப்பாடி பழனிசாமி மவுனம் காப்பது வேதனை அளிக்கிறது- முக ஸ்டாலின்
    X

    மேகதாது அணை பிரச்சனையில் எடப்பாடி பழனிசாமி மவுனம் காப்பது வேதனை அளிக்கிறது- முக ஸ்டாலின்

    மேகதாது அணை பிரச்சனையில் எடப்பாடி பழனிசாமி மவுனம் காப்பது வேதனை அளிப்பதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். #DMK #MKStalin #EdappadiPalaniswami #MekedatuDam
    திருச்சி:

    திருச்சியில் நடைபெற்ற முன்னாள் எம்.எல்.ஏ., பரணிகுமார் இல்ல திருமண விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

    இன்று நாட்டில் நிலவும் பிரச்சனைகள் அனைவருக்கும் தெரிந்தது. அதனை எடுத்து சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. தமிழகத்தின் டெல்டா பகுதி விவசாயிகளுக்கு அதிர்ச்சி தரும் செய்தி இன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முழுமையான திட்ட அறிக்கையை தயார் செய்துள்ளது.

    மேகதாது அணை பிரச்சனை உச்சநீதிமன்றத்தில் உள்ளது. இது குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பாராளுமன்ற மற்றும் ராஜ்ய சபா எம்.பி.க்கள் 55 பேர் பிரதமரிடம் நேரில் சந்தித்து மனு அளித்தோம். மேலும் இந்த திட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்துவதோடு, கர்நாடக அரசின் இந்த அணை கட்டும் திட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது என்று வலியுறுத்தியுள்ளோம்.

    இதற்கிடையே பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி நிதின் கட்கரி பேசும்போது, “காவிரியின் குறுக்கே மத்திய அரசு மற்றும் தமிழகத்தின் அனுமதியின்றி எந்த அணையும் கட்ட முடியாது. இது தொடர்பாக தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை கேட்டு முடிவெடுப்போம்” என தெளிவாக கூறியுள்ளார்.

    ஆனால் கர்நாடக அரசு தன்னிச்சையாக, மேகதாது அணை கட்டுவதற்கு வரைவு திட்ட அறிக்கை தயாரித்து, மத்திய அரசிடம் வழங்கியுள்ளது. அதனை மத்திய அரசும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது.


    ஆனால் மாநில முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதனை கண்டித்து ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை. இது வேதனை அளிக்க கூடியது. ஆட்சியாளர்கள் தமிழகத்தை பற்றி சிந்திக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வரும் வாய்ப்புகளை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் பொன்முடி, பெரியசாமி, கே.என்.நேரு, வேலூர் மாவட்ட செயலாளர் காந்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ., உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #DMK #MKStalin #EdappadiPalaniswami #MekedatuDam
    Next Story
    ×