search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி-கோதாவரி திட்டத்தால் தமிழகத்தில் நீர் பற்றாக்குறை தீரும்: தமிழிசை சவுந்தரராஜன்
    X

    காவிரி-கோதாவரி திட்டத்தால் தமிழகத்தில் நீர் பற்றாக்குறை தீரும்: தமிழிசை சவுந்தரராஜன்

    மத்திய மந்திரி நிதின் கட்கரி அறிவித்துள்ள காவிரி-கோதாவரி திட்டத்தால் தமிழகத்தில் நீர் பற்றாக்குறை தீரும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். #BJP #TamilisaiSoundararajan
    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாரதிய ஜனதா கட்சி 2019 பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கான பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    அந்த வகையில் பிரதமர் மோடியின் ஆலோசனைப் படி வீடு, வீடாக சென்று மத்திய அரசின் சாதனைகளை, திட்டங்களை எடுத்துக் கூறி, குறிப்பாக மோடியின் திட்டங்களால் பலன் பெற்ற வீடுகளில் தாமரை தீபம் ஏற்றுதல், இது பா.ஜ.க. குடும்பம், இது பா.ஜ.க. வீடு என்று அறிவிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    பலன் பெற்ற குடும்பத்தினரை பா.ஜ.க.வோடு இணைப்பதற்கான ஆலோசனை கூட்டம் இன்று நடக்கிறது. எங்கள் வாக்குச்சாவடி பலமான வாக்குச்சாவடியாகும். இதனை நிரூபிக்கும் வகையிலான பிரசாரத்தை விரைவில் தொடங்குவோம்.

    தமிழகத்தில் ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் காவிரியுடன் கோதாவரியை இணைக்கும் திட்டம் குறித்த மத்திய மந்திரி நிதின் கட்கரியின் அறிவிப்பு சாத்தியப்படக்கூடியதாகும். இதன் மூலம் காவிரி பிரச்சனை தீரும், கோதாவரி தண்ணீரும் கிடைக்கும்.

    வருங்காலங்களில் தமிழகத்தில் நீர் பற்றாக்குறை வராது. திருச்சியில் நடந்த ராணுவ தளவாட வழித்தட தொடக்க விழா மூலம் திருச்சிக்கு ரூ.3,300 கோடி முதலீடு கிடைத்துள்ளது. இது திருச்சிக்கு மட்டுமல்ல, 4 மாவட்டங்களுக்கும் அடங்கும்.

    எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்காக பிரதமர் மோடி 27-ந்தேதி வருகிறார். இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்பும் பிரமாண்ட முயற்சியும் நடந்து வருகிறது. இது நாட்டிற்கு பெருமை ஆகும். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களும் மத்திய அரசின் திட்டங்களால் பயன் பெற்று வருகின்றன.


    ஆனால் இதையெல்லாம் மறந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திற்கு மத்திய அரசு என்ன செய்தது என்று கேள்வி எழுப்பி வருகிறார். அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்ற நடிகர் அஜித்தின் அறிக்கை பாராட்டுக்குரியது. அது தெளிவான அறிக்கை.

    திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் அவரது ரசிகர்கள் எங்கள் கட்சியில் வந்து சேர்ந்தார்கள். நான் மருத்துவமனையில் ஒரு குழந்தைக்கு சிகிச்சை அளித்தபோது, நடிகர் அஜித் உதவி செய்ததாக பெற்றோர் கூறினர். இதன் அடிப்படையில் நல்ல கட்சியில் ரசிகர்கள் சேர்ந்தது வரவேற்கத்தக்கது.

    அரசியலில் இளைஞர்கள் யார் வேண்டுமானாலும் ஈடுபடலாம். அது விஜய், அஜித் என யாருடைய ரசிகர்களாவும் இருக்கலாம். ரஜினிகாந்த் தனது திட்டத்தை தெளிவாக கூறிவிட்டார். வாக்கு எந்திரம் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறிவருவது பொய்யான கூற்றாகும்.

    தேர்தல் ஆணையமே தெளிவான அறைகூவல் விடுத்துள்ளது. இதுகுறித்த செயல்விளக்க நிகழ்ச்சியில் காங்கிரஸ், ஆம்ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவில்லை. ஏனென்றால் அவர்களால் வாக்கு எந்திரத்தில் முறைகேடு என்பதை நிரூபிக்க முடியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #TamilisaiSoundararajan
    Next Story
    ×