
தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் மாவட்ட வாரியாக ஒரு சில ஊராட்சி கூட்டங்களில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் பங்கேற்று பொது மக்களிடம் மனுக்கள் பெற்று குறைகேட்டு பேசி வருகிறார்.
அதன்படி கரூர் மாவட்டத்தில் 2 ஊராட்சி சபை கூட்டங்களில் இன்று அவர் பங்கேற்று பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஒன்றியம் ஈசநத்தம் ஊராட்சியில் இன்று காலை 9.30 மணிக்கு தி.மு.க. ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. இதில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகேட்டு மனுக்கள் பெற்றார். பின்னர் அவர் பேசியதாவது:-
உங்கள் பிரச்சனைகளை, குறைகளை, எண்ணங்களை புரிந்துகொள்ள இந்த கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நடைபெறும் சர்வாதிகார ஆட்சிக்கும், மோடி தலைமையில் நடைபெறும் மத்திய பாசிச, மதவாத ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.
கோவிலுக்கு வருவது போல் நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள். பக்தர்களுக்கு புனித இடம் கோவில் என்றால் எங்களுக்கு கிராமங்கள் தான் புனித ஸ்தலம். இங்கிருந்துதான் அரசியல் தொடங்கி இருக்கிறது. முன்பெல்லாம் குடவோலை முறையில் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இப்போது வாக்குப்பதிவு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
தற்போது தமிழகம் முழுவதும் 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. பிப்ரவரி 17-ந்தேதிக்குள் அனைத்து கூட்டங்களும் முடிக்கப்பட்டு விடும். இந்த ஊராட்சி சபை கூட்டத்தை பார்த்து ஆளுங்கட்சியினர் அதிர்ந்துபோய் உள்ளனர். இதனால் அப்பட்டமாக பொய்களை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
நான் துணை முதல்வராக இருக்கும்போது கிராமங்களுக்கு செல்லவில்லை என்று கூறுகிறார்கள். நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது 12,617 கிராமங்களுக்கும், நூலகம் கொண்டு வந்தேன். அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ஒவ்வொரு கிராமத்திற்கும் ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கி மேம்படுத்தி வளர்ச்சி பணிகள் இதுவரை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டங்களில் முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, வி.செந்தில்பாலாஜி மற்றும் பலர் கலந்துகொண்டனர். #DMK #MKStalin #OPanneerSelvam