search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைமைச் செயலகத்தில் ஓ.பன்னீர் செல்வம் நள்ளிரவில் யாகம் நடத்தியது ஏன்?: முக ஸ்டாலின் கேள்வி
    X

    தலைமைச் செயலகத்தில் ஓ.பன்னீர் செல்வம் நள்ளிரவில் யாகம் நடத்தியது ஏன்?: முக ஸ்டாலின் கேள்வி

    தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நள்ளிரவில் யாகம் நடத்தியது ஏன்? என்பதை விளக்க வேண்டும் என்று முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
    சென்னை:

    தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நள்ளிரவில் யாகம் நடத்தியது ஏன்? என்பதை விளக்க வேண்டும் என்று முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

    சோழிங்க நல்லூரில் அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ இல்லத் திருமண நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. திமுக தலைவர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு லோகேஷ் - ஜெயஸ்ரீ திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.

    பின்னர் முக ஸ்டாலின் அரசியல் குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கொடநாடு விவகாரத்தில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த சயன், மனோஜ் ஆகிய இருவரும் சமீபத்தில் பேட்டி கொடுத்தனர். அதில் எடப்பாடி பழனிசாமி சொல்லித்தான் நாங்கள் செயல்பட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.

    இந்த செய்தி வந்ததும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியாயமாக என்ன செய்திருக்க வேண்டும். நான் குற்றமற்றவன், அப்பழுக்கற்றவன். என் மீது புகார் தெரிவிக்க யாருக்கும் தகுதி இல்லை என்று கூறி இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, தெகல்கா முன்னாள் ஆசிரியர் மாத்யூவை பிடித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

    ஆனால் எடப்பாடி பழனிசாமி அதை செய்யாமல் ஜாமீனில் வெளியே வந்திருந்த சயன், மனோஜ் ஆகியோரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்த செய்துள்ளார். ஆனால் நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை கேட்டு அவர்களை சிறையில் அடைக்காமல் ஜாமீனில் அனுப்பிவிட்டது.

    கொடநாடு விவகாரத்தில் நியாயமாக எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு விசாரணைக்கு தன்னை ஆட்படுத்தி இருந்தால் அவரை பாராட்டி இருக்கலாம். இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மீது நான் குற்றம் சொல்வதால் என் மீது அவர் வழக்கு போடத் தயாரா?

    இப்போது இன்னொரு செய்தி வருகிறது. அது தலைமைச் செயலகத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அவரது அறையில் நள்ளிரவில் சிறப்பு யாகம் நடத்தி இருக்கிறார் என்பதுதான்.



    எதற்கு இந்த யாகம்? ஊழல் வழக்கில் ஜெயலலிதா சிறை சென்றதுபோல் கொடநாடு வழக்கு முடியும்போது எடப்பாடி பழனிசாமி சிறைக்கு சென்றுவிடுவார். முதல்-அமைச்சர் பதவி காலியாக போகிறது என்பதால் அதை கைப்பற்ற ஓ.பன்னீர் செல்வம் யாகம் நடத்தியதாக சொல்கிறார்கள்.

    முதல்-அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு யாகம் நடத்தினாரா? அல்லது அங்குள்ள கோப்புகளை எடுத்ததற்காக யாகம் நடத்தினார்களா? என்பதற்கு ஓ.பன்னீர் செல்வம் பதில் சொல்லியே தீர வேண்டும். வருகிற பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டசபைக்கும் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சி அமைய நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன், எம்எல்ஏ- க்கள் ரங்கநாதன், வாகை சந்திரசேகர், தாயகம் கவி உள்பட பலர் பங்கேற்றனர்.
    Next Story
    ×