search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பைனான்ஸ் அதிபரை கொலை - கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்
    X

    பைனான்ஸ் அதிபரை கொலை - கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்

    வில்லியனூரில் பைனான்ஸ் அதிபரை கொன்றது ஏன் என்பது குறித்து கொலையாளி வாக்குமூலம் அளித்துள்ளார்.
    வில்லியனூர்:

    வில்லியனூர் கணுவா பேட்டைய சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 55). பைனான்ஸ் அதிபர்.

    இவர் நேற்று முன்தினம் இரவு வில்லியனூர் கோட்டைமேடு சுடுகாட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரை அவரது நண்பர்கள் ராஜா, சக்திவேல், சபரி, நடராஜன் ஆகியோர் கொலை செய்தது தெரியவந்தது. 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

    கொலையாளி ராஜா போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    ராமலிங்கம் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். நானும் அவருடன் சேர்ந்து வட்டிக்கு பணம் கொடுத்தேன். இந்த நிலையில் எனக்கு வேண்டிய சிலருக்காக ராமலிங்கத்திடம் இருந்து ரூ.10 லட்சம் வாங்கி கடனாக கொடுத்திருந்தேன்.

    ஆனால் அதை வாங்கியவர்கள் அசலையும், வட்டியையும் தரவில்லை. எனவே ராமலிங்கம் என்னிடம் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார். இதனால் அவரை தீர்த்து கட்ட வேண்டும் என்று முடிவு செய்தேன்.

    இதற்காக எனது நண்பர்கள் சக்திவேல், சபரி, நடராஜன் ஆகியோர் உதவுவதாக தெரிவித்தனர். எனவே ராமலிங்கத்தை கொல்வதற்கு திட்டத்தை உருவாக்கினோம்.

    நேற்று முன்தினம் மதியம் அவரை வில்லியனூரில் உள்ள மதுபாருக்கு அழைத்து சென்று நன்றாக குடிக்க வைத்தோம். அதன்பிறகு தியேட்டருக்கு சென்று சினிமா பார்த்தோம். இரவு மீண்டும் அவரை குடிக்க அழைத்து அங்கு வைத்து கொல்வது என்று திட்டமிட்டோம்.

    நாங்கள் இரவு நேரத்தில் கோட்டைமேடு சுடுகாட்டு பகுதியில் அமர்ந்து மது குடிப்பது வழக்கம். ராமலிங்கத்தை கொல்ல வேண்டும் என்பதற்காக இரும்பு குழாய் ஒன்றை எடுத்து சென்று அங்கு தயாராக வைத்திருந்தோம்.

    இரவு 9 மணி அளவில் ராமலிங்கத்தை அழைத்துக் கொண்டு நான் அங்கு சென்றேன். மற்ற 3 பேரும் பின்னர் வந்தனர். நாங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மதுகுடித்தோம். அப்போது சக்திவேல், ராஜாவிடம் ஏன் பணம் கேட்டு தொல்லை கொடுக்கிறாய் என்று கூறி ராமலிங்கத்தை அடித்தார்.

    அப்போது மறைத்து வைத்திருந்த இரும்பு குழாயை எடுத்து ராமலிங்கத்தின் தலையில் பலமுறை ஓங்கி அடித்தோம். இதில் மண்டை உடைந்து அந்த இடத்திலேயே இறந்துவிட்டார். உடனே நாங்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டோம். நல்லூர் பகுதியில் பதுங்கி இருந்த எங்களை போலீசார் கைது செய்துவிட்டனர்.

    இவ்வாறு ராஜா வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

    கைதானவர்களிடம் சூப்பிரண்டு ரங்கநாதன், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் விசாரணை நடத்தி இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் அவர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். #tamilnews
    Next Story
    ×