என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கொடநாடு விவகாரத்தில் முதல்வர் மீது குற்றச்சாட்டு - கைதான 2 பேரிடம் அதிரடி விசாரணை
சென்னை:
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந்தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார்.
10-க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் எஸ்டேட்டில் புகுந்து கொள்ளை சம்பவத்தையும் அரங்கேற்றினர்.
ஜெயலலிதா உயிரோடு இருந்த வரையில் யாருமே நெருங்க முடியாத அளவுக்கு பலத்த பாதுகாப்புடன் காணப்பட்ட கொடநாடு எஸ்டேட்டில் நடந்த இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்த கனகராஜ் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அவரது தூண்டுதலின் பேரிலேயே கொலை-கொள்ளையில் ஈடுபட்டதாக கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.
முக்கிய ஆவணங்களை கனகராஜ் எடுத்துச் சென்று விட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில் சம்பவம் நடந்த சில நாட்களிலேயே அவர் மர்மமான முறையில் கார் விபத்தில் பலியானார்.
இந்த கொள்ளை சம்பவத்தில் கைதான கேரளாவை சேர்ந்த கூலிப்படை கும்பல் தலைவன் சயனின் மனைவி, மகள் ஆகியோரும் விபத்தில் பலியானார்கள். ஷயான் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
கொடநாடு எஸ்டேட்டில் பணியாற்றிய கம்ப்யூட்டர் ஆப்ரேட்டரும் மர்மமான முறையில் உயிரிழந்தார். இப்படி 5 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொடநாடு சம்பவம் தொடர்பாக சயன், மனோஜ், வாழையார் ரவி உள்ளிட்ட 10 பேர் கைதானார்கள்.
இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கோத்தகிரி போலீசார் குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் 1½ ஆண்டுகளுக்கு பிறகு, கொடநாடு விவகாரத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டப்பட்டது. இது அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கடந்த 11-ந்தேதி தெகல்கா புலனாய்வு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான மேத்யூஸ் சாமுவேல், கொடநாடு வழக்கின் குற்றவாளியான சயன், மனோஜ், வாழையார் ரவி ஆகியோர் கூட்டாக டெல்லியில் பேட்டி அளித்தனர்.
அப்போது கொடநாடு கொலை தொடர்பாக பரபரப்பான வீடியோ ஒன்றையும் அவர்கள் வெளியிட்டனர். தன் மீதான இந்த குற்றச்சாட்டை எடப்பாடி பழனிசாமி மறுத்தார்.
இதனை தொடர்ந்து அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியான ராஜன் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். உடனடியாக மேத்யூஸ் சாமுவேல், சயன், மனோஜ், வாழையார் ரவி ஆகியோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. துணை கமிஷனர் செந்தில் குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் டெல்லி விரைந்தனர்.
அங்கு தனியார் விடுதியில் தங்கி இருந்த சயன், மனோஜ் இருவரையும் நேற்று இரவு சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இரவோடு இரவாக இருவரையும் சென்னை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி இன்று அதிகாலை 4.15 மணியளவில் சென்னை வந்த விமானத்தில் சயன், மனோஜ் ஆகியோர் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர்.
விமான நிலையத்தில் இருந்து 5 மணியளவில் வெளியில் வந்த போலீசார் அங்கு தயாராக இருந்த போலீஸ் வேனில் 2 பேரையும் ஏற்றி எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்து 2 ஆண்டுகள் ஆகப்போகும் நிலையில், இப்போது புதிதாக குற்றச்சாட்டை கூறி இருப்பது ஏன்? இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்-யார்? என்பது போன்ற கேள்விகளை கேட்டு 2 பேரிடமும் அதிரடியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தெகல்கா முன்னாள் ஆசிரியரான மேத்யூஸ் சாமுவேல் உங்களை தொடர்பு கொண்டது எப்படி? கொடநாடு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு இப்போது முதல்வர் மீது புகார் கூறுவது ஏன்? என்பது போன்ற கேள்விகளையும் போலீசார் முன் வைத்துள்ளனர்.
இதற்கு சயன், மனோஜ் ஆகியோரும் விரிவாக பதில் அளித்துள்ளனர். ஷயான் கூறும்போது, எனது மனைவியும், மகளையும் விபத்தில் பலி கொடுத்துவிட்டேன். இனி இழப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை என்று பேட்டியில் கூறிய கருத்துக்களையே போலீசாரிடம் கூறி இருப்பதாக தெரிகிறது.
இவர்கள் அளித்த தகவல்களை போலீசார் வாக்கு மூலமாக பதிவு செய்துள்ளனர்.
சயன், மனோஜ் இருவரையும் எழும்பூரில் உள்ள மாஜிஸ்திரேட்டு குடியிருப்பில் நீதிபதி முன்பு இன்று போலீசார் ஆஜர் படுத்துகின்றனர். பின்னர் கோர்ட்டு உத்தரவுப்படி 2 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.
சயன், மனோஜ் இருவரிடமும் விசாரணை நடைபெற்று வரும் எழும்பூர் பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குள் பத்திரிகையாளர்கள் யாரும் அனு மதிக்கப்படவில்லை. நுழைவாயிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசாரை தவிர வெளியாட்கள் யாரும் நுழைய முடியாத அளவுக்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. #KodanadEstate #KodanadVideo
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்