search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடலூர் அருகே வாழை தோட்டத்தை நாசம் செய்த யானைகள்
    X

    கூடலூர் அருகே வாழை தோட்டத்தை நாசம் செய்த யானைகள்

    கூடலூர் அருகே வாழைத் தோட்டத்தை யானைகள் நாசம் செய்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. சுரங்கனாறு நீர் வீழ்ச்சி, வெட்டுக்காடு, பளியங்குடி உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் வாழை, தென்னை, கரும்பு மற்றும் மானாவாரி பயிர்களை பயிரிட்டுள்ளனர்.

    இதனையொட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து காட்டுப்பன்றி, காட்டெருமை, யானை உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி விளை நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அகழிகள் வெட்டப்பட்டு சோலார் மின் வேலி அமைக்கப்பட்டது.

    ஆனால் தற்போது அவை பராமரிக்கப்படாததால் வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகள், விளை நிலங்களில் புகுவது தொடர் கதையாகி வருகிறது.

    வெட்டுக்காடு சில்ராம படுகை பகுதியில் உள்ள பேச்சியம்மாள் என்பவருக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் செவ்வாழை பயிரிட்டுள்ளார். தற்போது அவை தார் வெட்டும் பருவத்தில் இருந்துள்ளது. இங்கு புகுந்த யானை கூட்டம் வாழைகளை நாசம் செய்தன.

    இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த சில நாட்களாகவே யானைகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே இரவு நேர காவலுக்கு செல்ல விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

    இப்பகுதியில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவ்வாழைகளை யானைக் கூட்டம் சேதப்படுத்தியது. பல்வேறு இன்னல்களுக்கு இடையே விவசாயம் செய்து வரும் எங்களுக்கு இது மேலும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. விவசாய நிலங்களை சுற்றி அகழி அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் நிரந்தரமாக விரட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு தீர்வு காண வேண்டும். நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×