search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு வக்கீல் வேறு யாருக்காகவும் வாதாடக் கூடாது- பாலகிருஷ்ண ரெட்டி வழக்கில் உயர்நீதிமன்றம் அட்வைஸ்
    X

    அரசு வக்கீல் வேறு யாருக்காகவும் வாதாடக் கூடாது- பாலகிருஷ்ண ரெட்டி வழக்கில் உயர்நீதிமன்றம் அட்வைஸ்

    அரசு வழக்கறிஞர் வேறு யாருக்காகவும் வாதாடக் கூடாது என, பாலகிருஷ்ண ரெட்டி மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின்போது, உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தினார். #MadrasHighCourt #BalakrishnaReddy
    சென்னை:

    1998ல் கள்ளச்சாராய எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றபோது, பொதுச்சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அவர் பதவியை ராஜினாமா செய்தார்.  அத்துடன் தீர்ப்பை எதிர்த்து பாலகிருஷ்ண ரெட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.



    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் தன் மீது நேரடியாக குற்றம்சாட்டப்படவில்லை என்றும், 72-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டதாகவும் பாலகிருஷ்ண ரெட்டி கூறினார். தன்னை குற்றவாளி என அறிவித்ததால் தகுதியிழப்பு ஏற்பட்டிருப்பதால் தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

    காவலர் அளித்த புகார் மற்றும் சாட்சியத்தின் அடிப்படையில் தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் பாலகிருஷ்ண ரெட்டி கூறினார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதி, தகுதியிழப்பு ஏற்படுகிறது என்பதற்காக தீர்ப்புக்கு எப்படி தடை கோர முடியும்? என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து விசாரணை நடைபெற்றது.

    அப்போது, காவல்துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், கூட்டமாக சென்று பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தார்கள் என்றே வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், பாலகிருஷ்ண ரெட்டி மீது தனிப்பட்ட புகார் இல்லை என்றும் கூறினார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘பாலகிருஷ்ண ரெட்டிக்கு எதிராக கீழ் நீதிமன்றம் விதித்த தீர்ப்பு தவறு என்று கூறுவீர்களா? அரசு வழக்கறிஞர் காவல்துறை தரப்புக்காகத்தான் வாதாட வேண்டும்; வேறு யாருக்காகவும் வாதாடக் கூடாது. பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்கலாமா? வேண்டாமா? என்பதை மட்டும் கூறுங்கள்’ என அறிவுறுத்தினார்.

    அத்துடன் காவல்துறையின் விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி கூறினார்.

    தீர்ப்பு வெளியானதும் பதவி விலகிவிட்டதால் தனது கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்று பாலகிருஷ்ண ரெட்டி கேட்டுக்கொண்டார். வாதங்கள் நிறைவடைந்ததையடுத்து, மதியம் உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக நீதிபதி தெரிவித்தார். #MadrasHighCourt #BalakrishnaReddy

    Next Story
    ×