search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்.ஆர்.சி. நகரில் நகர் நிர்வாக அலுவலகத்துக்கு 11 மாடியில் புதிய கட்டிடம் - முதலமைச்சர் திறந்து வைத்தார்
    X

    எம்.ஆர்.சி. நகரில் நகர் நிர்வாக அலுவலகத்துக்கு 11 மாடியில் புதிய கட்டிடம் - முதலமைச்சர் திறந்து வைத்தார்

    எம்.ஆர்.சி. நகரில் நகர் நிர்வாக அலுவலகத்துக்கு 11 மாடியில் புதிய கட்டிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். #EdappadiPalaniswami
    சென்னை:

    தமிழ்நாடு முழுவதும் உள்ள 11 மாநகராட்சிகள் (சென்னை நீங்கலாக) மற்றும் 124 நகராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்ற திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக ஒருங்கிணைப்பு வழிகாட்டும் அலுவலகமாக நகராட்சி நிர்வாக ஆணையரகம் செயல்பட்டு வருகிறது.

    இதேபோன்று, 528 நகர்ப்புற அமைப்பான பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்ற திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக ஒருங்கிணைப்பு வழிகாட்டும் அலுவலகமாக பேரூராட்சிகள் இயக்ககம் செயல்பட்டு வருகிறது.

    தற்போது சென்னை, சேப்பாக்கம், எழிலகம் வளாகத்தில் 200 அலுவலக ஊழியர்களுடன் 1640 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இடத்தில் நகராட்சி நிர்வாக அலுவலகமும், சென்னை, குறளகம் வளாகத்தில் 120 அலுவலக ஊழியர்களுடன் 1100 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இடத்தில் பேரூராட்சிகளின் இயக்ககமும், போதுமான இட வசதியின்றி செயல்பட்டு வருகின்றது.

    தமிழ்நாடு அரசினால் 664 நகர்ப்புறங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் வழங்கல் திட்டப்பணிகள், பாதாள கழிவுநீரகற்று திட்டப்பணிகள், திடக்கழிவு மேலாண்மை பணிகள், தூய்மை இந்தியா திட்டப்பணிகள், அம்ருத் திட்டப்பணிகள், எழில்மிகு நகரமைப்பு பணிகள், சாலை திட்டப்பணிகள், மழைநீர் கால்வாய் அமைத்தல், நவீன தகன எரிவாயு மேடைகள் அமைத்தல், இறைச்சி கூடங்கள் அமைத்தல் போன்ற பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்ய முறைப்படி காலவாரியாக ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டியுள்ளது.

    இவற்றிற்கான ஆய்வு கூட்டரங்க வசதிகள் இல்லாத காரணத்தினால், பிற துறை அலுவலக ஆய்வு கூட்டரங்கில் ஒவ்வொரு முறையும் அனுமதி பெற்று இக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.

    இந்த சூழலில், நகராட்சி நிர்வாகம் மற்றும் பேரூராட்சிகள் இயக்ககம் அனைத்து வசதிகளுடன் தனித்து இயங்கக்கூடிய வகையில் வசதிகளை உருவாக்குவதன் அவசியத்தை கருத்தில் கொண்டு, சென்னை, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி. நகரில், 11,000 சதுர மீட்டர் பரப்பளவில், தரை மற்றும் 11 தளங்களுடன், 73 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகராட்சி நிர்வாக ஆணையரகம் மற்றும் பேரூராட்சிகள் இயக்கக அலுவலகங்களை உள்ளடக்கிய நகர் நிர்வாக அலுவலக வளாகக் கட்டடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

    இப்புதிய கட்டடத்தின் ஒவ்வொரு தளமும் சராசரியாக 1000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. அனைத்து தளங்களுக்கும் மைய அணுகுமுறையில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.

    இக்கட்டடத்தின், தரைத்தளத்தில் இருக்கை வசதியுடன் கூடிய உணவகம், தரை மற்றும் முதல் தளத்தில் 252 இருக்கை வசதி கொண்ட உயர் கூரையுடன் கூடிய கருத்தரங்க கூடம், ஆறாம் தளத்தில் 1015 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட ஆய்வு கூட்ட அரங்கு, காணொளி கூட்ட அரங்கு, பயிற்சி அரங்குகள், ஊழியர்கள் உணவு அருந்துமிடம் மற்றும் கருத்து கலந்தாய்வு அரங்கு, ஏழாம் மற்றும் எட்டாம் தளங்களில் பேரூராட்சிகள் இயக்கக அலுவலகமும், ஒன்பது, பத்து மற்றும் பதினொன்றாம் தளங்களில் நகராட்சி நிர்வாக அலுவலகமும் செயல்படும்.

    மேலும், அதிவேக வசதியுடன் கூடிய மின்தூக்கி வசதிகள், கண்காணிப்பு கேமரா வசதிகள், பூங்கா, வாகனங்கள் நிறுத்துமிடம், தீயணைப்பு வசதிகள், அனைத்து தளங்களுக்கும் கழிவறை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஆகிய அனைத்து வசதிகளுடன் இவ்வலுவலகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

    நகராட்சி நிர்வாக அலுவலகம் மற்றும் பேரூராட்சிகள் இயக்கக அலுவலகம் ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு போதுமான இடவசதியுடன் அலுவலகக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு தேவையான உள்ளாட்சி சார்ந்த சேவைகளை சிறப்புடன் ஆற்றிட இயலும்.

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான பணியாளர்களின் 194 வாரிசுதாரர்களுக்கு, கருணை அடிப்படையில் இளநிலை வரைவு அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஓட்டுநர், பதிவுரு எழுத்தர், அலுவலக உதவியாளர், காவலர் மற்றும் துப்புரவு பணியாளர் ஆகிய பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 7 வாரிசு தாரர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்கள் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், நகராட்சி நிர்வாக ஆணையர் கோ.பிரகாஷ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் சி.என். மகேஸ்வரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். #EdappadiPalaniswami


    Next Story
    ×