search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை நடந்த நவக்கரை பகுதி
    X
    கொள்ளை நடந்த நவக்கரை பகுதி

    கோவை அருகே ரூ.1 கோடி நகை கொள்ளையில் ஹவாலா கும்பல் தொடர்பு? சி.சி.டி.வி. காமிரா காட்சிகள் மூலம் விசாரணை

    கோவை அருகே ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு காமிரா மூலம் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
    கோவை:

    கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள பிரபல நகைக்கடையான கல்யாண் ஜூவல்லர்ஸ் உள்ளது.

    இங்கிருந்து கோவை 100 அடி சாலையில் உள்ள கல்யாண் ஜூவல்லரிக்கு அர்ஜூன்(22), வில்பர்ட்(31) ஆகிய ஊழியர்கள் நேற்று ஒரு காரில் ரூ.1 கோடி மதிப்புள்ள 350 பவுன் தங்க நகைகள், 250 கிராம் வெள்ளி நகைகள் கொண்டு வந்தனர்.

    கேரள-தமிழக எல்லையான கோவை மாவட்டம் நவக்கரை பகுதியில் கார் வந்த போது, பின்னால் 2 கார்களில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் திடீரென நகைக்கடைக்கு சொந்தமான கார் மீது மோதி குறுக்கே நிறுத்தினார்கள். உடனே அந்த கும்பல் நகைக்கடை ஊழியர்களை மிரட்டி காரில் இருந்து வெளியேற்றி விட்டு, தங்க நகைகள் இருந்த காரை நகைகளுடன் கடத்திக் கொண்டு தப்பி ஓடினர்.

    பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் நகைக் கடை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இது குறித்து கல்யாண் ஜூவல்லரி நிறுவன உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் கொள்ளை குறித்து கோவை கே.ஜி.சாவடி போலீசில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் உத்தரவின்பேரில் டி.எஸ்.பி.க்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    சம்பவ இடத்தின் அருகே பெட்ரோல் பங்க் மற்றும் ஓட்டல்கள் இருந்தன. அவற்றின் முன்புறம் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளையர்கள் 2 கார்களில் வந்து நகைக்கடை ஊழியர்களின் காரின் குறுக்கே நிறுத்தும் காட்சிகள் தெரிந்தது. அவற்றை கைப்பற்றிய போலீசார், கொள்ளையர்கள் வந்த ஒரு காரின் எண் மூலம் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இதற்கிடையே ஒரு தனிப்படையினர் கோவையில் இருந்து கேரளா செல்லும் பாதைகளில் உள்ள வாளையார், வேலந்தாவளம், கொழிஞ்சாம்பாறை பகுதிகளில் சோதனை சாவடி களில் இருந்த காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகளுடன் கொள்ளையடிக்கப்பட்ட கார் இதுவரை கேரளாவுக்குள் செல்லவில்லை என்பது தெரிய வந்தது.

    எனவே கொள்ளையர்கள் கோவையிலோ அல்லது கோவை வழியாக திருப்பூர், ஈரோடு, நீலகிரிக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என கருதிய போலீசார் அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த பணியில் சைபர் கிரைம் போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    திருச்சூரில் இருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகள் காரில் கொண்டு வருவது கொள்ளையர்களுக்கு முன் கூட்டியே தெரிந்தது எப்படி? என்ற சந்தேகம் போலீசாருக்கு நிலவுகிறது. நகைக்கடை ஊழியர்களுக்கு இந்த கொள்ளையில் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் தனிப்படை போலீசார் கேரளாவுக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை-கேரள நெடுஞ்சாலையில் ஹவாலா கும்பல் கைவரிசை காட்டிய சம்பவங்கள் ஏற்கனவே நடந்துள்ளது. எனவே இச்சம்பவத்தில் ஹவாலா கும்பல் ஈடுபட்டுள்ளதா? என்றும் விசாரணை நடந்து வருகிறது.

    இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் கூறியதாவது:-

    கொள்ளை சம்பவம் தொடர்பாக முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது. கூடுதல் டி.எஸ்.பி. அனிதா மேற்பார்வையில் டி.எஸ்.பி.க்கள் வேல்முருகன், விஜயகுமார், பாலமுருகன், கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளோம். ஓரிரு நாளில் கொள்ளையர்களை பிடித்து விடுவோம் என்றார். #tamilnews
    Next Story
    ×